தீக்ஷிதரும் முருகனும் முத்துஸ்வாமி தீக்ஷிதருக்கு ஸுப்ரஹ்மண்ய ஸம்பந்தம் ஜாஸ்தி அவர் ஸகல க்ஷேத்ரங்களுக்கும் போய் ஸகல தெய்வங்களையும் பாடி வைத்தவர் ஆ

தீக்ஷிதரும் முருகனும்

முத்துஸ்வாமி தீக்ஷிதருக்கு ஸுப்ரஹ்மண்ய ஸம்பந்தம் ஜாஸ்தி. அவர் ஸகல க்ஷேத்ரங்களுக்கும் போய் ஸகல தெய்வங்களையும் பாடி வைத்தவர். ஆசார்யாள் மாதிரி. ஆனாலும் உபாஸனையில் அவரை அம்பாள் பக்தராகவே விசேஷமாகத் தெரிந்து கொண்டிருக்கிறோம். கடைசியிலும் அவர் மீனாக்ஷியம்மன் பேரில் ‘பாசமோசனி’ என்று பாடிக்கொண்டேதான் சரீரத்தை விட்டிருக்கிறார். ஆனால் அவருடைய பிறப்பு, அவருக்கு ஸாஹித்ய வ்யுத்பத்தி (ஆற்றல்) ஏற்பட்டது முதலியவற்றிலெல்லாம் ஸுப்ரஹ்மண்ய ஸம்பந்தமே இருக்கிறது.

முத்துஸ்வாமி என்கிற பேரே வைத்தீச்வரன் கோவில் முத்துக்குமாரஸ்வாமியின் பெயரை வைத்துத்தான் அவருக்கு நாமகரணமாயிருக்கிறது. அப்பா ராமஸ்வாமி தீக்ஷிதர் – அவரும் பெரிய பண்டிதர். ஸங்கீதத்தில் நிரம்பத் தெரிந்தவர். ஸாஹித்யங்கள் பண்ணியிருப்பவர். பெரிய ஸ்ரீவித்யா உபாஸகருங்கூட. அவருக்கு நாற்பது வயசு வரை புத்ர பாக்யமில்லை. பத்னியோடுகூட வைத்தீச்வரன் கோவிலுக்குப் போய் முத்துக்குமாரஸ்வாமி ஸந்நிதியில் ஒரு மண்டலம் விரதம் இருந்தார். அந்த அம்மாளுக்குத் தன் மடியிலே தேங்காய், பழம் முதலான மங்கள வஸ்துக்களை யாரோ கட்டுவதாக ஸ்வப்னம் ஏற்பட்டது. அடுத்தாற் போலவே கர்ப்பமும் உண்டாயிற்று. முத்துக்குமாரஸ்வாமி புத்ரவரம் தந்ததற்கே அப்படி ஸ்வப்னத்தில் ஸமிக்ஞையாயிருக்கிறதென்று புரிந்து கொண்டார்கள். அதற்கேற்றாற் போல் பிள்ளையும் ஒரு க்ருத்திகா நக்ஷத்திரத்திலேயே – அது பங்குனி மாஸ க்ருத்திகை – பிறந்தது. அப்படிப் பிறந்தவர்தான் முத்துஸ்வாமி தீக்ஷிதர்.

அப்புறம் அவர் வளர்ந்து ஸங்கீத அப்யாஸம், ஸ்ரீவித்யா அப்யாஸம், காசியில் ஸந்நியாஸ குருவுடன் வாஸம் எல்லாம் பண்ணினார். காசியிலேயே குரு ஸித்தியானார். ஸித்தியாகிற ஸமயத்தில் அவர் தீக்ஷிதரிடம் ‘தக்ஷிணத்துக்குத் திரும்பிப் போய்விடு. அங்கே முதலில் திருத்தணிக்குப் போ. நீ எதற்காக ஜன்மா எடுத்திருக்கிறாயோ அது ஸபலமாகும்படியாக (பலிதமடையுமாறு) ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி அநுக்ரஹம் பண்ணுவார்” என்று சொன்னார்.

அப்படியே தீக்ஷிதர் திருத்தணிக்குப் போனார். அடிவாரத்தில் திருக்குளத்தில் ஸ்நானம் பண்ணிவிட்டு அவர் மலை ஏறிப் போய்க் கொண்டிருக்கும்போது முன்பின் தெரியாத ஒரு கிழ ப்ராஹ்மணர் அவரை, “முத்துஸ்வாமி!” என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டு, “வாயைத் திற” என்றார். அவர் அப்படியே பண்ணியதும் வாயிலே ஒரு கல்கண்டைப் போட்டுவிட்டு போன இடம் தெரியாமல் போய்விட்டார். வந்தது யாரென்று தீக்ஷிதருக்குப் புரிந்து விட்டது. இவர் வந்த கார்யமும் தத்க்ஷணமே ஆரம்பித்துவிட்டது – ஸாஹித்ய வ்யுத்புத்தி ஏற்பட்டுவிட்டது! தகப்பனாரான பரமேச்வரனுக்கும் குருவாக இருந்த குஹன் மீது அப்போதே எட்டு வேற்றுமைகளில் ஒவ்வொன்றிலும் ஒரு க்ருதியாக எட்டு க்ருதிகளைப் பாடிவிட்டார்.

க்ருதிகளில் தம் முத்ரையாக அவர் ‘குருகுஹ’ என்ற ஸுப்ரஹ்மண்ய நாமாவையே வைத்திருப்பதையும் குறிப்பாகக் கவனிக்க வேண்டும். குகையில் இருப்பவன் குஹன். ஹ்ருதய அந்தரங்கம் என்ற குகையில் ஆத்ம ஸ்வரூபமாக உள்ள குருதான் குருகுஹன்.

தீக்ஷிதர் சரீர யாத்திரையை முடித்தது ஒரு தீபாவளியில். அதற்கு அடுத்த ஆறாம் நாள்தான் மஹா ஸ்கந்த ஷஷ்டி வருவதும். ஷஷ்டியன்று பூர்த்தியாகிற விதத்தில் ஆறு நாள் வ்ரத உபவாஸங்களிருப்பது வழக்கம். அதாவது தீக்ஷிதர்வாளின் பிறப்பு மட்டுமில்லாமல் முக்தியடைந்ததிலும் ஒரு ஸுப்ரஹ்மண்ய ஸம்பந்தம் தெரிகிறது….

தீக்ஷிதர் க்ஷேத்ரம் க்ஷேத்ரமாகப் போய் அங்கேயுள்ள மூர்த்தியை – அது என்ன மூர்த்தியானாலும் அதை – வித்யாஸமில்லாமல் பாடினார் என்றேன். அந்தந்த க்ருதியிலேயே அது எந்த க்ஷேத்ரத்தைப் பற்றியது என்பதற்கு அகச் சான்று என்கிறார்களே, அப்படிப்பட்ட internal evidence இருக்கும். குறிப்பிட்ட க்ஷேத்ரத்தில் அந்த ஸ்வாமிக்கு உள்ள பெயர், அதற்கான மந்த்ர ரஹஸ்யம், அந்த ஸ்தல புராணக் குறிப்பு என்று ஏதாவது இருக்கும். இந்த ‘ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய’வில் குறிப்பாக அது இன்ன க்ஷேத்ரத்தில் பாடியது என்று காட்டுவதாக ஒன்றுமில்லை.

அத்தனை ஸுப்ரஹ்மண்ய க்ஷேத்ரங்களிலுள்ள மூர்த்திகளையும் சேர்த்துத் தம்முடைய பாட்டினாலேயே மூலமூர்த்தியாக அவர் பண்ணிவைத்து விட்ட மாதிரி இந்த க்ருதி பிரகாசிக்கிறது!

அனந்தகோடி நமஸ்காரத்தோடு ஆரம்பித்திருக்கிறார். அப்புறம் -