ஈசனின்றி இயற்கை இயங்குமா? : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இதோ நான் உட்கார்ந்து கொண்டிருக்கிற மணையைப் பார்த்தவுடன் இதைப் பண்ணின ஒருத்தன் இருக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறீர்கள். அதோ அங்கே, இதோ மரத்தால் ஆனதுதான் – ‘ஆனது’ என்ன? மரத்திலிருந்தே விழுந்ததுதான் – ஒரு கிளை கிடக்கிறது. அதைப் பார்த்தவுடன் ஒரு தச்சன் பண்ணியிருப்பதாக யாரும் நினைப்பதில்லை. ஏன்? இந்த மணையை ஒரு சீராக, ரெக்டாங்கிளாக (நீள் சதுரமாக) இழைத்திருக்கிறது. பூமியின் தூசு தும்பு படாதபடி, பூச்சி பொட்டு ஏறாதபடி இதிலே கீழே கட்டைகள் அடித்திருக்கிறது. இம்மாதிரி இதிலே ஒரு ஒழுங்கு ஏற்பட்டிருப்பதாலும், உட்கார உபயோகமாகணும் என்ற பர்பஸில் (நோக்கத்தில்) இந்த மணையில் இந்த ஒழுங்கை உண்டாக்கியிருப்பதாலும் இதற்கு ஒரு கர்த்தா இருக்கணும் என்று முடிவு செய்கிறோம். ஜடமான ஒரு மரப் பீஸ் தானாகத் தன்னை ரெக்டாங்கிளாக இழைத்துக் கொண்டு, கட்டை அடித்துக் கொண்டு மநுஷ்யாள் உட்காரணும் என்ற பர்பஸை ஃபுல்ஃபில் பண்ணும்படியாக (நோக்கத்தை நிறைவேற்றுவதாக) ரூபம் கொள்ள முடியாது என்பதால் புத்தியுள்ள ஒரு ஜீவன்தான் இதைச் செய்திருக்கணும் என்று தீர்மானிக்கிறோம்.

அங்கே கிடக்கிற கிளையோ முண்டும் முடிச்சுமாக இருக்கிறது. இந்த மணையில் இருக்கிற ‘ஆர்டர்’ அதில் இல்லை; அது எந்த பர்பஸையும் ஃபுல்ஃபில் பண்ணவுமில்லை. ஆகையால் அதிலே ஒரு ஜீவனின் புத்தி விலாஸத்தை நாம் நினைப்பதில்லை.

அந்த மரத்துக்கு அடியிலே மாவடு அது பாட்டுக்கு ஆர்டருமில்லாமல், பர்பஸுமில்லாமல் உதிர்ந்து கிடந்தால், யாரோ அதைக் கொட்டினதாக நாம் நினைப்பதில்லை. தானே விழுந்திருக்கிறது என்றே புரிந்து கொள்கிறோம். அதுவே, அந்த மாவடுவையெல்லாம் அங்கே குவித்து வைத்திருந்தால், குவிப்பு என்ற ஆர்டரில் மாவடுக்களை அமைத்த ஒருவன் இருந்தாகணும்; அவன் அதை வீட்டுக்குக் கொண்டு போவது, அல்லது விலைக்கு விற்பது, அல்லது ஃப்ரீயாக விநியோகிப்பது என்ற ஏதோ ஒரு பர்பஸுக்காக குவித்திருக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறோம்.

ஆர்டர் இல்லாமலேகூட பர்பஸ் இருப்பதுண்டு. ஒரு வீட்டில் துணிமணி, பாத்திரம், பண்டம், புஸ்தகம், கிஸ்தகம் எல்லாவற்றையும் வாரி இறைத்து ஒரே டிஸ்-ஆர்டராக இருந்தாலும் திருடி விட்டு ஓட்டம் பிடிக்க வேண்டும் என்ற பர்பஸுக்காகத் திருடர்கள் இப்படிப் பண்ணியிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்கிறோம்.

மொத்தத்தில் ஆர்டரோ, பர்பஸோ, இரண்டுமோ இருந்துவிட்டால் அது புத்தியுள்ள ஒரு ஜீவ சக்தி பண்ணின காரியம்; ஜடமே பண்ணிக் கொண்டதில்லை என்று ‘இன்ஃபர்’ (அநுமானம்) செய்கிறோம்.

இப்போது யாரும் பண்ணினதாகத் தோன்றாத அந்தக் கிளை, அதற்கு மூலமான தாவர வர்க்கம் பற்றிக் கொஞ்சம் ஆலோசிக்கலாம். முண்டும் முடிச்சுமாயிருக்கிற அந்தக் கிளைக்குள், நமக்குள் ரத்தக் குழாய் ஓடுகிற மாதிரி பூமிக்குள்ளிருந்து ஜலத்தை உறிந்து எடுத்துக்கொண்டு போகிற அதி நுட்பமான குழாய்கள் ஆச்சரியமான ஒழுங்கோடு, அதாவது ஆர்டரோடு, நேற்றைக்கு அது மரத்தில் அங்கமாயிருந்த வரையில் வேலை பண்ணிக் கொண்டிருந்தன – மரம் வளர வேண்டும் என்ற பர்பஸுக்காக! இந்த இரண்டு முடிச்சிலே ஸில்க் மாதிரி துளர் உண்டாகிறது. இலையில் ஓடுகிற நரம்புகளில் எத்தனையோ ஆர்டர்; அது ‘க்ளோரோஃபில்’ என்கிற பச்சையான ஜீவஸத்தை உண்டுபண்ணும் பர்பஸையும் ஸெர்வ் பண்ணுகிறது. முண்டு முடிச்சிலேதான் பரம மிருதுவான புஷ்பம் உண்டாகிறது.

தாவர வர்க்கத்தில் பூச்செடி, பழமரம் என்று இரண்டு சொல்கிறோம். பூச்செடி பழம் கொடுக்கமலிருக்கலாம். ஆனால் பழ மரத்துக்குப் பூ இல்லாமலில்லை – அத்தி, பலா மாதிரி அபூர்வமான வனஸ்பதி ஜாதி தவிர.

இந்த பூச்செடி, பழமரம் என்ற இரண்டும் எத்தனை ஸாமர்த்தியமாக தங்கள் தங்கள் இனத்தை விருத்தி பண்ணிக் கொள்கின்றன என்று பார்த்தால் ஆச்சர்யமாயிருக்கிறது. பூச்செடியில் அழகாகப் புஷ்பம் உண்டாகிறது. அதன் டிஸைன்களில் அலாதி ஆர்டர். அதுமட்டுமில்லை. பர்பஸும் இருக்கிறது. மநுஷ்யனின் ரஸிக உணர்ச்சியைப் பூர்த்தி செய்வதோடு செடிக்கே பயன் தருகிற பெரிய பர்பஸ்!இந்த அழகிலேதான் தேனீ வசீகரமாகி வந்து தேன் குடிக்கிறது. அதற்கு ஆஹாரம் கொடுக்கிற பர்பஸுக்குள்ளேயே ரஹஸ்யமாக, அதைவிடப் பெரியதான சொந்த பர்பஸும் ஃபுல்ஃபில் ஆகிறது. தேனீ செய்கிற மகரந்த பரிவர்த்தனையினால்தான் இந்தச் செடி இனவிருத்தி பெறுகிறது. இப்படி இதிலே ஜட வஸ்து பண்ணவே முடியாததான, ரொம்பவும் புத்திபூர்வமான ‘ட்ரிக்’ இருக்கிறது!

இன்னொரு வேடிக்கை கூட: ரொம்புவும் வர்ண விசித்திரமில்லாத பூவாகச் சிலது உண்டாகின்றன;அவை தேனீயை ஆகர்ஷணம் பண்ணுவதற்காக ஏகப்பட்ட வாஸனையை வைத்துக் கொண்டிருக்கின்றன. ஸுகந்தம் நிறைய இருக்கிற மல்லிகை, மகிழ், சம்பங்கி, மனோரஞ்சிதம் மாதிரிப் புஷ்பங்களில் கலர் விசித்திரம் இல்லை. கலர் விசித்திரம் நிறைய இருக்கும் கனகாம்பரம், துலுக்க சாமந்தி, காகிதப்பூ வகைகள் முதலியவற்றில் வாஸனை இல்லை. தேனீயை இழுக்க ஏதோ ஒரு ட்ரிக் போதும், இரண்டும் வேண்டாம் என்று இதிலே ஒரு எகானமி (சிக்கனம்) வேறே! (ரோஜா மட்டும் விதி விலக்கு.) ஜடவஸ்து இப்படியெல்லாம் கெட்டிக்கார ப்ளான் போட்டு அதன் பிரகாரம் பண்ண முடியுமா?

இன்னொரு வேடிக்கை கூட! நேச்சர், இயற்கை என்று சொல்வதில் நிறைய ‘வெரைய்டி’, தினுசு தினுசாகப் பார்க்க வேணடும் என்கிற காவிய புத்தி யதேஷ்டமாகத் தெரிகிறது. வாஸனைப் பூ கலர்ப்பூ வித்யாஸம் போலவே கார்த்தாலே பூக்கிறது, ராத்திரி பூ என்று ஒரு வித்யாஸம். இதிலே ராத்திரி பூக்கிறதுதான் அந்த வேளையில் கண்ணுக்குத் தெரியவேண்டுமே என்பதால் வெள்ளை வெளேரென்று மல்லிகை ஜாதிகள், பன்னீர்ப் பூ ராமபாணம் என்கிற நில சம்பங்கி இப்படி இருக்கின்றன!

ஒரு அணுவுக்குள் மத்ய ந்யூக்ளியஸைச் சுற்றிப் பரமாணுக்கள் பஹு வேகத்தில் ஓடிக் கொண்டிருப்பதிலிருந்து ஸூர்யனைச் சுற்றி க்ரஹங்கள் ஓடுகிறவரை ஒவ்வொன்றும் மாறுதலில்லாமல் விதி ப்ரகாரம் நடப்பதைப் பார்க்கும்போது வெறும் ஜட சக்தியான ஒரு இயற்கையால்தான் இதெல்லாம் ஆகிறதென்று தோன்றிவிடுகிறது. ஆனால் இப்படி அணுவிலிருந்து அண்ட கோளங்கள் வரை ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாக, வெவ்வேறாகத்தானே விதிகள் ஏற்பட்டிருக்கின்றன? இப்படி எத்தனை வெரையட்டியான விதிகள்? அது மாத்திரமில்லை. ஒவ்வொரு வர்க்கத்திற்கும் ஒரே விதி என்று இருக்கும்போது கூட, அதற்குள்ளேயே விதி விலக்கு என்று ஒவ்வொன்று மாறுதலாகவும் இருந்து விடுகிறதே! த்ருஷ்டாந்தமாக இப்போது சொன்ன வ்ருக்ஷவர்க்கத்திலேயே ஒரு மாறுதலாகப் பூ இல்லாமல் காய்க்கிற வனஸ்பதி வகையும் இருக்கிறதே! இதையெல்லாம் ஆலோசிக்கும்போது இயற்கை என்பது ஏதோ ஜட சக்தி இல்லையென்றும், ரஸ வைசித்ரியத்தில் குதூஹலிக்கிற ஜீவனுள்ள ஒரு மஹா பெரிய புத்தி சக்திதான் என்றும் தெரிகிறதோல்லியோ?………

பழமரம், பூச்செடி என்று இரண்டு சொல்லி, பூச்செடி எத்தனை ஸாமர்த்தியமாக ஸந்ததியை விருத்தி பண்ணிக் கொள்கிறதென்று சொன்னேன். பழமரத்தில் மநுஷ்யனுக்கு ருசியான பழம் கிடைக்கிறது. இது ஒரு பர்பஸ். இதற்குள் திரிசமனாக இன்னொரு பர்பஸ். இதே மாதிரிப் பழம் பின் ஸந்ததிக்கும் கிடைக்க வேண்டும் என்ற நம்முடைய ஸ்வய ஸம்பந்த லாபத்துக்காகப் பழத்துக்குள் இருக்கிற கொட்டையை நடுகிறோம்; இதிலேயே அந்த மரம் தன் ஸந்ததியை விருத்தி பண்ணிக் கொள்கிற அதன் ஸ்வய லாபமான பெரிய பர்பஸும் ஃபுல்ஃபில் ஆகிறது.

இப்படி ஆலோசித்துப் பார்த்ததில் என்ன தெரிகிறது? “ஜடவஸ்து தானாக order -ஐ (ஒழுங்கை) purpose -ஐ (நோக்கத்தை) ஏற்படுத்திக்கொள்ள முடியாது; அதனால் மரத்தை மணையாகப் பண்ண ஒரு தச்சன் இருக்க வேண்டும்” என்ற நம்முடைய premises -ன் (அடிப்படைக் கொள்கையின்) படியே, அந்த மரத்தைப் பண்ணவும் ஒரு மஹா பெரிய தச்சன் இருந்தாக வேண்டும் என்று தெரிகிறது! நாம் பண்ணுவதைவிட இன்னும் பெரிய ஆர்டரோடு, இன்னம் பெரிய பர்பஸ்களுக்காக இந்த மரம் இருக்கிறதால், நம்மைவிட மஹா கெட்டிக்காரனான தச்சன் அவன் என்றும் தெரிகிறது! நாம் செய்கிறதையெல்லாம் அப்பட்டமாகக் காட்டி, டெமான்ஸ்ட்ரேட் பண்ணுகிறோமென்றால் நம்மைவிடப் பரமாத்புதங்களைப் பண்ணும் அவனோ இத்தனையையும் பரம ரஹஸ்யமாகப் பண்ணித் தன்னுடைய ஸூக்ஷ்மமான ரஸாநுபவத்தைக் காட்டுவதோடு, பண்ணுகிற தன்னையே ஒளித்துக் கொண்டு நம்முடைய கெட்டிக்காரத்தனத்தையெல்லாம் அசட்டுத்தனமாக்கி விடுகிறான்!

மநுஷ்யன் தின்னாத வேப்பம் பழம் என்றால் அதைத் தின்ன ஒரு காக்கா ஜாதியை அதோடு பிணைக்கிறான். அந்த காக்கா மநுஷ்யனைப் போலக் கொட்டையை நட்டு அந்த விருக்ஷத்தின் இன விருத்தியை செய்யாது என்பதால் அது எச்சமிட்டே கொட்டை வேறே இடத்தில் (இந்த மரத்தின் நிழலில் வாடாமலிருப்பதற்காக வேறே இடத்தில்) முளைக்கும்படிப் பண்ணுகிறான்.

நாம் வெளியே விடுகிற கார்பன்-டை-ஆக்ஸைடை மரம் உள்ளே இழுத்துக் கொள்வது; அது பதிலுக்குத் தருகிற தித்திப்புப் பழத்தை நாம் சாப்பிடுவது; அதையே நாம் எருவாக மாற்றி மறுபடி அதற்குத் தருவது என்றிப்படி பல இனங்களை, ஜீவ-சடங்களை, ஒன்றுக் கொன்று உபயோகமாகக் கோத்துக் கோத்து வைத்திருக்கிறான்.

இப்படியே எண்ணி முடியாத மர வர்க்கங்கள், மலைகள், ஸமுத்ரங்கள், லோகங்கள், நக்ஷத்ரங்கள், க்ரஹங்கள் எல்லாமும் அத்யாச்சரியமான ஒழுங்கோடு ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்து ஏராளமான உத்தேசங்களைப் பூர்த்தி பண்ணிக் கொண்டிருப்பதை நினைத்துப் பார்த்தால், இயற்கை, இயற்கை என்று ஜடமாகச் சொல்லப்படுவது ஜீவ சைதன்யமான ஈச்வர லீலைதான் என்று எப்படித் தெரியமால் போகும்?

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is கொசுவும் கேசவனும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  நவநீத கிருஷ்ணன்; வடபத்ரசாயி
Next