ஹிந்து ஸமூஹத்தின் தோஷம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

எந்த கட்டுப்பாடும் இல்லாத ஹிந்து ஸமூஹந்தான் இந்தப்பெரிய தோஷத்துக்குப் பாத்திரமாகிக் கொண்டிருக்கிறது. மற்ற மதஸ்தருக்கு சக்தி வாய்ந்த ஆர்கனைஸேஷன்கள் இருக்கிறமாதிரி நம் ஸமூஹத்தை கவனிக்க யார் இருக்கிறார்கள்? மடம் என்று வைத்துக் கொண்டு உங்கள் பணத்தையெல்லாம் வாங்கிக்கொண்டு, குரு ஸ்தானம் கொண்டாடிக் கொண்டிருக்கிற என்னால்தான் என்ன ப்ரயோஜனம்? ஆஸேது ஹிமாசலம், இந்த தேசத்தில் எங்கே ஒரு அநாதை ஹிந்து செத்துப்போனாலும் அவன் சரீரத்தை சாஸ்த்ரப்படி ஸம்ஸ்காரம் பண்ணுவதற்கு ஒரு ஏற்பாடு செய்ய எனக்குக் கையாலாகவில்லை. ஆனாலும், இதில் குரு ஸ்தானம் என்ற பெத்த பேர் எனக்கு இருப்பதால், பொறுப்பு எனக்குத்தான் ஜாஸ்தி என்றாவது தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்தது, நம் ஸமூஹத்தின் நிலைமை இப்படி இருக்கிறதே என்று நிஜமாக துக்கப்படுகிறேன். என் வார்த்தையைக் கேட்கக்கூடியவர்கள் என்று தோன்றுகிற உங்களிடம் என்னால் முடிந்தமட்டும் சொல்கிறேன்.

நீங்கள் பாபம் பண்ணினால், அது உங்களைத் திருத்தாமலே ‘குரு’ என்று பேர் மட்டும் வைத்துக் கொண்டிருக்கிற என்னைத்தான் சேரும். எனக்கு நீங்கள் நமஸ்காரம் பண்ணுகிறீர்கள் அல்லவா? அதனால் உங்கள் பாபத்தைப் போக்குகிற பொறுப்பையும் என்னிடந்தான் ஒப்படைக்கிறீர்கள்.

‘அநாதை ப்ரேதம்’ ஒரு பக்கம் இருக்கட்டும் — ஹிந்து ஸமூஹமே அநாதையாக இருக்கிற இப்போது, இந்த ஸமூஹத்தை நாதனுள்ளதாக்கி, அது சாஸ்த்ரப்படி புனிதமாக விளங்கும்படிப் பண்ணவேண்டிய கடமையை நான்தான் கண்ணும் கருத்துமாக ஆற்றியாக வேண்டும்.

இந்த அநாதை ப்ரேத ஸம்ஸ்காரத்துக்காகத்தான் ஒவ்வோர் ஊரிலும் ‘ஹிந்துமத ஜீவாத்ம கைங்கர்ய ஸங்கம்’ என்று ஆரம்பிக்கச் சொல்லி வந்தேன். அநேக ஊர்களில் அப்படி ஏற்பாடு பண்ணி நன்றாக உருவாகியும் இருக்கிறது. முக்யமாக கும்பகோணத்தில் இந்த ஸங்கம் ரொம்பவும் நன்றாக நடந்து வருகிறது. ஆஸ்பத்திரிக்காரர்களும், முனிஸிபாலிடிகாரர்களும், ஜெயில் அதிகாரிகளுமே இந்த ஸங்கத்துகாரர்களைக் கூப்பிட்டுத் தங்களிடம் சேரும் அநாதை ப்ரேதத்தை ஒப்பிக்கிற அளவுக்கு அங்கே இந்த உத்தமமான தொண்டு வேர் பிடித்துவிட்டது.

இதற்காகத் தனி ஸங்கம் இல்லாவிட்டாலும், அந்தந்த ஊர் பஜனை கோஷ்டிகளே வாரவழிபாடும், மற்ற பொதுநலப்பணிகளும் பண்ணுவதோடு அநாதை ப்ரேத ஸம்ஸ்காரத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். நூறோடு நூற்றியொன்று என்று இல்லாமல், தாங்கள் செய்கிற மற்ற எல்லாப் பணிகளையும்விட இதுவே உத்க்ருஷ்டமானது என்ற உணர்வோடு செய்ய வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is அநாதைப் ப்ரேதம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  இதுதான் அஸ்வமேதம்
Next