நாலாம் வர்ணத்தின் அநுகூல நிலை : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

நாலாவது வர்ணத்தவரின் தர்மம் மற்ற எல்லா விதமான சரீர உழைப்பையும் பண்ணுவது. மற்றவர்களுக்கு உள்ள status (அந்தஸ்து) , சௌகரியம் இவர்களுக்கு இல்லை என்று தோன்றும். ஆனால் இவர்களுக்கு ஆசாரக் கட்டுப்பாடுகளை ரொம்பக் குறைத்து ஸ்வதந்திரமாக விட்டிருப்பதையும் கவனிக்க வேண்டும். இவர்கள் மற்ற எல்லாரைக் காட்டிலும் திருப்தியாக, பகவானுக்குக் கிட்டத்தில் இருந்து வந்தார்கள். “கலியுகம் மட்டம் இல்லை; நாலாவது வர்ணத்தவர்கள் மட்டம் இல்லை. கலிதான் ரொம்பவும் உசத்தி; நாலாவது வர்ணத்தவர்கள்தான் ரொம்ப உசந்தவர்கள் – “கலி: ஸாது சூத்ர: ஸாது” என்று ஸாட்சாத் வியாஸாசாரியர்களே சொல்லியிருக்கிறார். ஏன்? மற்ற மூன்று யுகங்களிலும் தியானம், தபஸ், பூஜை என்று ரொம்பவும் கஷ்டப்பட்டாலே அடைய முடிகிற பகவானை நாம ஸங்கீர்த்தனத்தாலேயே கலியில் எளிதில் அடைந்து விடலாம். அதனால் “கலி:ஸாது” என்கிறார். பிராம்மணன், க்ஷத்ரியன், வைச்யன் என்ற மற்ற மூன்று வர்ணத்தவர்களுக்கும் கர்வம் உண்டாக இடம் இருக்கிறது. தங்களைப் பற்றி அவர்களுக்கு இப்படி ஒரு அஹங்காரம் உண்டாகிவிட்டதானால் அப்புறம் ஆத்மா கிடைக்கிற வழியேயில்லை. ‘நமக்கு புத்தி வன்மை இருக்கிறது’ என்று பிராம்மணனும், ‘நமக்கு அதிகார சக்தி இருக்கிறது’ என்று க்ஷத்ரியனும், ‘நமக்கு பண பலம் இருக்கிறது’ என்று வைசியனும் அஹங்காரப் பட்டுக் கொண்டு தப்பாக போவதற்கு இடமிருக்கிறது. நாலாவது வர்ணத்தவனுக்கு இப்படி இல்லை. அடக்க குணத்துக்கு இடமாக இருக்கிறவன் அவன். “அடக்கம் அமரருள் உய்க்கும்” என்று வள்ளுவர் கூடச் சொல்கிறார் அல்லவா? அதனால் அவன் ஸ்வாமிக்குக் கிட்டேயே இருக்கிறான். அஹங்காரம் வந்துவிடக் கூடாது, அதை அழித்து ஜீவனை பகவத் பிரஸாதத்துக்கு உரியவனாகப் பண்ண வேண்டுமென்பதற்காகத்தான் மற்ற மூன்று வர்ணத்தாருக்கு வேதத்திலும் வேத காரியங்களிலும் மூன்று grade -களில் அதிகாரம் கொடுத்திருக்கிறது. அந்த வைதிக கர்மாநுஷ்டானங்களைப் பண்ணுவதானால் அதற்கு நிரம்ப ஆசாரங்கள், ஸ்நான-பான-ஆஹார நியமாதிகள் உண்டு. இந்த நியமம் என்ற பத்தியம் இருந்தால்தான் வேத மந்திரம் என்ற மருந்து வேலை செய்யும். ஆசாரம் தப்பினால் அபசாரம். அது பெரிய பாபம். அதற்காகக் கஷ்டம் அநுபவித்தாக வேண்டும். அதனால் எப்போதும் அவர்கள் கண்குத்திப் பாம்பாக ஆசாரங்களை அநுஷ்டித்தாக வேண்டும். நாலாவது வர்ணத்தவனுக்கு இப்படி இல்லை. அவனுக்கு நியமங்கள் ரொம்பவும் குறைச்சல்தான். அவன் செய்கிற உழைப்பே அவனுக்கு சித்த சுத்தி, அதுவே அவனுக்கு வேத கர்மாநுஷ்டானம், ஸ்வாமி எல்லாமும்! இப்படி அவனுக்கு எளிதில் ஸித்தி ஏற்படுகிறது. இதனால்தான் “சூத்ர:ஸாது” என்று வியாஸரே இரண்டு கைகளையும் உயரத் தூக்கிக் கொண்டு சபதம் பண்ணினார்.

அவனுக்கு வயிறு ரொம்ப ஆகாரம் கிடைக்காவிட்டால், அவனுக்கு மான‌த்தை ரக்ஷிக்கத் துணி கிடைக்காவிட்டால், அவனுக்கு மழை வெயிலிலிருந்து காப்பாக ஒரு குடிசை இல்லாவிட்டால் அது சமூஹத்துக்கு பாபம்; ராஜாங்கத்துக்கு பாபம். இந்த வசதிகளைப் பண்ணித்தர வேண்டும். இதே வசதிகளை – இவற்றுக்குத் துளிக்கூட அதிகமில்லாமல்தான் – பிராம்மணர்களும் பெற்றிருந்தார்கள் என்று முன்னே சொன்னதை திருப்பிச் சொல்கிறேன். அதாவது பொருளாதார லெவலில் பக்ஷபாதம் செய்ததாகச் சொல்லவே கூடாது என்பதற்காகச் சொல்கிறேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is அனைத்தும் அனைவர் பொருட்டுமே!
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  மரியாதைக் குறைவல்ல;அஹம்பாவ நீக்கமே!
Next