விவாஹ வயதும் சட்டமும் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

உபநயனம் மாதிரிப் பெண்ணின் ஏழாவது வயசில் கல்யாணம் பண்ண வேண்டும்; அப்போதுதான் சரணாகதி புத்தி வரும் – என்று சொன்னால், ‘இது இந்த காலத்தில் ஸாத்தியமா? சட்ட விரோதமல்லவா?’ என்று கேட்பீர்கள்.

‘ராஜாங்கத்தின் சட்டத்தை மீறு’ என்று சொல்லக் கூடாதுதான். அப்படிச் சொல்லவில்லை. சட்ட மறுப்பு (civil disobedience) என்று இப்போது ஆட்சி நடத்துகிறவர்களே ஒரு காலத்தில் பண்ணிக் காட்டித்தான் இருக்கிறார்கள். ‘சட்டம் என்று யாரோ எழுதினதற்காக எங்கள் ஸ்வாதந்தரியத்தை விட மாட்டோம்’ என்று அப்போது சொன்னார்கள். அதே மாதிரி, “ஜெயிலில் போட்டாலும் பரவாயில்லை; பிராணன் போனாலும் பரவாயில்லை; ஆத்ம க்ஷேமத்துக்காக ஏற்பட்ட விவாஹ ஸம்ஸ்காரத்தை வெறும் லௌகிக விஷயமாக்கிச் சட்டம் பண்ணினால் ஏற்கமுடியாது” என்று கிளம்புகிற வேகம் நம் ஜனங்களுக்கு இல்லை. அப்படி இல்லையே என்பது மட்டும் நான் ‘சட்டத்தை மீற வேண்டாம்’ என்று சொல்வதற்குக் காரணமில்லை. ஒரு விஷயத்தில் மீறினால், மற்றவற்றிலும் மீறுகிற எண்ணம் உண்டாகி, கட்டுப்பாடே போய்விடும். அதனால்தான் [சட்டத்தை மீறும்படிச்] சொல்லவில்லை. ஆனாலும் சட்டத்தை மீறாமலே ராஜாங்கத்துக்கு சாஸ்திர அபிப்ராயத்தை விடாமல் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். ராஜாங்கத்துக்கு மட்டுமில்லை; ஜனங்களிலும் நூற்றுக்குத் தொண்ணூறு பேருக்கு மேல் சாஸ்திர அபிப்ராயத்தை விட்டு விட்டார்களே! அவர்களுக்கும் பாக்கியிருக்கிற ஸ்வல்ப சாஸ்திரக்ஞர்கள் எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். சட்டத்தை மீறாமலே, முன்னேற்றம் எத்தனை நிதானமாக ஏற்பட்டாலும் அதனால் மனம் தளராமல் நூறு வருஷம் ஆனாலும் ஆகட்டும்! இன்னம் அதிகமானாலும் ஆகட்டும்! உன்னதமான இந்த தேசாதாரம் மறுபடி பழக்கத்தில் வரப் பண்ணுவதற்கு நம்மாலானதை சாந்தமான வழியிலேயே செய்வோம் என்று செய்ய வேண்டும். பலனை பார்க்க நாம் [உயிரோடு] இருக்க வேண்டும் என்பதில்லை. ஆயிரம் வருஷத்துக்கு அப்புறம்தான் பலன் உண்டாகும் என்றாலும், அதற்கு இப்போதே நம்மாலான விதையைப் போட்டுவிட வேண்டும். யத்தனத்தை இப்போது ஆரம்பித்தால்தான், என்றைக்கோ ஒரு நாளாவது பலன் கிடைக்கும். பிரயத்தனமே இல்லாவிட்டால் என்றைக்கும் பலன் ஏற்பட முடியாதல்லவா? விதையே போடாவிட்டால் எப்படி மரம் உண்டாகும்?

தர்மசாஸ்திரமே பெரிய சட்டம் என்று ராஜாங்கத்தாருக்கும், பொதுஜனங்களுக்கும் புரியும்படியாக, ஹிதமான முறையில் (by persuasion) வற்புறுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is விவாஹமே பெண்டிருக்கு உபநயனம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  விவாஹ வயது குறித்த விவாதம்
Next