தார்மிக நிர்வாஹத்தின் முதுகெலும்பு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அபேக்ஷகராகப்பட்டவர்கள் ‘வாரியம் செய்தொழித்த பெருமக்களுக்கு ஆத்ம பந்துக்களல்லாதாராக’ இருக்க வேண்டும் என்பது கடைசி ஷரத்து. அதாவது: ஸபை மெம்பர் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கமிட்டியில் அங்கம் வஹிப்பார் என்று சொன்னேனல்லவா? இவர்களைத்தான் வாரியம் செய்தவர் என்பது. எல்லா மெம்பருமே ஏதோ ஒருவிதத்தில் வாரியம் செய்தவர்தான். இந்த வேலையை ஒரு வருஷ ‘டென்யூரு’க்கு (பதவிக்காலத்துக்கு)ப் பிறகு விட்டுவிட வேண்டுமென்றும், மூன்று வருஷத்துக்கு அப்புறம்தான் மறுபடி எலெக்ட் ஆகி அந்தப் பதவி பெற முடியுமென்றும் பார்த்தாயிற்று. இம்மாதிரி ஒரு ‘டென்யூர்’ முடித்தவர்தான் ‘வாரியம் செய்தொழித்தவர்’. இவர் மட்டுந்தான் மறுபடி மூன்று வருஷம் தேர்தல் பெற முடியாதென்றில்லாமல், இவருடைய நெருங்கிய உறவினரான ‘ஆத்ம பந்துக்களும்’ தேர்தலில் அபேக்ஷகராயிருக்க முடியாது என்பதே ஷரத்தின் அர்த்தம்.

இந்த ஷரத்தைப் பார்க்கிறபோது, ‘இதென்ன? நேராக ‘கான்டிடேட்’டின் (அபேக்ஷகரின்) அர்த்த – ஆத்ம சுத்தங்களைப் பார்ப்பது ஸரிதான். ஆனால், அது போதாதென்று, இது இரண்டும் இருக்கிறவனைக்கூட அவன் ஏற்கனவே மெம்பராயிருந்தவனின் நெருங்கிய பந்துவா என்று பார்த்து, இந்த சுற்றிவளைத்த காரணத்துக்காக டிஸ்க்வாலிஃபை செய்வதென்றால் அதெப்படி ஸரியாகும்?’ என்று தோன்றலாம். ஆனால், நன்றாக அறிவைச் செலுத்திப் பார்த்தோமானால் இந்தக் கடைசி ஷரத்தும் தர்மந்யாயமான நிர்வாஹத்துக்கு முதுகெலும்பு மாதிரியாகுமென்று புரியும்.

எப்படியென்றால், முன்னே மெம்பராக இருந்தவர்களின் நெருங்கிய பந்துக்கள் புதிதாக மெம்பரானால், அவர்கள் செய்துவிட்டுப் போன முறைகேடுகளை இவர்கள் நீடிக்கப் பார்ப்பார்கள். அவர்கள் பண்ணின தப்புக்களை இவர்கள் மூடி மழுப்பப் பார்ப்பார்கள். அல்லது அவற்றையே ஸரியானவை என நிலைநாட்டப் பார்ப்பார்கள். ஸந்தர்ப்பத்தை அநுஸரித்து, அவர்கள் முன்னே எடுத்த சில முடிவுகளை இப்போது ரிவைஸ் செய்யத் தேவை இருந்தாலும், அப்படிப் பண்ணினால் அது அவர்களிடம் தப்புக் கண்டுபிடித்துக் காட்டிக் கொடுத்தாற்போலாகும் என்று உறவுப் பாசத்தால் நினைத்து, இதற்காக ஊர் நலனை விட்டுக்கொடுப்பார்கள். மனித இயற்கையில் அநேகமாகப் பெரும்பாலார் இப்படியெல்லாம்தான் பண்ணப் பார்ப்பார்கள். இப்படி முற்காலத்திலிருந்த உறவுக்கார மெம்பர்களுக்காக தற்கால மெம்பர்கள் ஊரை விட்டுக்கொடுப்பது மட்டுமில்லாமல், பிற்காலத்தில் ஸபை மெம்பராக வரக்கூடிய தங்களுடைய ஆத்ம பந்துக்களுக்கு ஆதாயமான திட்டங்களைக் கொண்டுவருவதில் எண்ணம் செலுத்தவும் இடமுண்டு.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is புது ரத்தம் பிடிக்க
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ராஜபீட விஷயமும் ஊர்ச்சபை விஷயமும்
Next