பக்தியோக விஷயம் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ஒரு முக்யமான விஷயம் சொல்ல வேண்டும். ‘ஆசார்யாளும் ஸரி, அவருக்கு முந்தி க்ருஷ்ண பரமாத்மாவும் ஸரி, கர்மயோக அதிகாரிகள், ஞானயோக அதிகாரிகள் என்று ஏன் இரண்டே பிரிவு பண்ணினார்கள்? பக்தி யோக அதிகாரிகள் என்று ஏன் மூன்றாவதாக ஒன்றை வைக்கவில்லை?’ என்றால் — கர்மயோகி, ஞானயோகி இரண்டு பேருக்குமே பக்தி அத்யாவச்யந்தான்; அந்த இரண்டிலுமே ஒரு முக்யமான அங்கமாக இரண்டு பேரும் பக்தியும் பண்ணவேண்டியிருக்கிறது என்பதால்தான் அதைத் தனியாகப் பிரித்து வைக்கவில்லை. கர்மாக்காரன் ஒரு லெவலில் பக்தி பண்ணனும் என்றால் ஞானக்காரனும் இன்னொரு லெவலில் பண்ணத்தான் வேண்டும். ச்ரத்தையில் கீழ் மட்டத்தில் ஒன்று, மேல் மட்டத்தில் ஒன்று என்று இரண்டு லெவல் சொன்னேனல்லவா? ‘பக்தி-ச்ரத்தை’ என்று சேர்த்துச் சொல்கிறதற்கேற்ப பக்தியிலும் இப்படி இரண்டு லெவல் டைப்ரைட்டிங், ஷார்ட் ஹாண்ட் கோர்ஸ்களில் ஹையர், லோயர் என்று இரண்டு இருக்கிற மாதிரி! கீழ் லெவல் — கர்மாக்காரன் நம் கர்மாவை எல்லாம் பார்த்துத் தண்டிக்க ஒரு ஈச்வரன் இருக்கிறான் என்கிற ஞாபகம் இருப்பதற்காக பக்தி பண்ண வேண்டும். அந்த லெவலில் கொஞ்சம் முன்னேறி, சிதறி ஒடிக்கொண்டேயிருக்கும் மனஸைப் ப்ரேமையினால் ஒருமுகப்படுத்துவதற்காக பக்தி பண்ண வேண்டும். இன்னும் கொஞ்சம் முன்னேறி — ஆனாலும் ‘லோயர்’தான்; ‘ஹைய’ருக்குப் போகவில்லை — பண்ணும் கார்யமெல்லாம் அவனுக்கே என்று ‘பல த்யாகம்’ பண்ணுவதான பக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்புறம் ‘ஹையர்’ போய் ஞானயோகம் பண்ணுகிறானே, அவன், தான் எந்த ஆத்மாவை — ப்ரம்மத்தை — அநுபவிக்க ஸாதனை பண்ணுகிறோமோ அதுவேதான் ஸகுணத்தில் ஈச்வரனாயிருப்பது, தனக்கு அத்வைத வாஸனையைக் கொடுத்து இந்த வழியில் போகப் பண்ணியிருப்பவன் அந்த ஈச்வரன்தான், முடிவாக ஸித்தியும் அவன் அநுக்ரஹத்தால் தான் ஏற்பட வேண்டும் என்கிற எண்ணத்தில் பக்தி பண்ண வேண்டும்.

அதற்கு மேலே — மேலா, கீழா, ‘ஹை’யா, ‘லோ’வா எதுவுமே தெரியாத — அநுபூதியை அடைந்துவிட்ட ஸித்தர்களும்கூட1 பக்தி பண்ணுவார்கள், அதற்குக் காரணமே கிடையாது என்று அப்படிப்பட்ட ஒருவரான சுகாசார்யாள் சொல்லியிருக்கிறார்2.

ஆக இப்படி எல்லா நிலையிலும், கர்மா, ஞானம் இரண்டிலும் பக்தி இருப்பதால்தான் அதைப் பிரித்துச் சொல்லவில்லை.

அந்த விஷயம் இருக்கட்டும்…


1 ஆத்ம ஸாக்ஷாத்காரம் என்ற ஸித்தியைப் பெற்றவர்: அஷ்டமாஸித்தி பெற்றவரல்ல.

2 ஸ்ரீமத் பாகவதம் 1.7.10

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஸகலருக்கும் சொல்வதன் காரணம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  அனைவருக்கும் அடிப்படை அத்வைத அறிவு
Next