துப்புடையாரை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

நாலாம் பத்து

துப்புடையாரை

ஒவ்வொருவரும் புண்ணிய பாவ பலன்களை அநுபவித்தே தீரவேண்டும். பாவம் செய்யும்போது கேட்பதில்லை;சொல்வதில்லை;பயப்படுவதில்லை. நரகத்தை நினைக்கும்போதுதான் பயமாக இருக்கிறது. பகவானின் திருநாமங்களைச் சொன்னால் என்ன? அவனை நினைத்தால் என்ன!உயிர் போகும் நேரத்தில் முடியுமா? உடல் நன்றாக இருக்கும்போதே அவனை நினையுங்கள். வராகாவதாரத்தில் அவன் பிராட்டிக்குச் சொன்னபடி உங்களைக் காத்தே தீர்வான். 'அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்'என்று ஆழ்வாரும் அரங்கனிடம் வேண்டுகிறார்.

அரவணைப்பள்ளிகொள் அரங்கனைப் போற்றல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்

423. துப்புடை யாரை யடைவ தெல்லாம்

சோர்விடத் துத்துணை யாவ ரென்றே,

ஒப்பிலே னாகிலும் நின்ன டைந்தேன்

ஆனைக்கு நீயருள் செய்த மையால்,

எய்ப்பென்னை வந்து நலியும் போதங்

கேதும்நா னுன்னை நினைக்க மாட்டேன்,

அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தேன்

அரங்கத் தரவணைப் பள்ளி யானே! 1

யான் சாகும்பொழுது என்னைக் குறிக்கொள்

424. சாமிடத் தென்னைக் குறிக்கொள் கண்டாய்

சங்கொடு சக்கர மேந்தி னானே,

நாமடித் தென்னை யநேக தங்ணடஞ்

செய்வதா நிற்பர் நமன்ற மர்கள்,

போமிடத் துன்திறத் தெத்த னையும்

புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை,

ஆமிடத் தேயுன்னைச் சொல்லி வைத்தேன்

அரங்கத் தரவணைப் பள்ளி யானே! 2

அல்லல் படாவண்ணம் காத்திடு

425. எல்லையில் வாசல் குறுகச் சென்றால்

எற்றி நமன்றமர் பற்றும் போது,

நில்லுமி னென்னு முபாய மில்லை

நேமியும் சங்கமு மேந்தி னானே,

சொல்லலாம் போதேயுன் நாம மெல்லாம்

சொல்லினே னென்னைக் குறிக்கொண் டென்றும்,

அல்லற் படாவண்ணங் காக்க வேண்டும்

அரங்கத் தரவணைப் பள்ளி யானே! 3

மூன்றெழுத்தாய முதல்வனே!என்னைக் காத்திடு

426. ஒற்றை விடைய னும்நான் முகனும்

உன்னை யறியாப் பெருமை யோனே,

முற்ற வுலகெல்லாம் நீயே யாகி

மூன்றெழுத் தாய முதல்வ னேயோ,

அற்றது வாணா ளிவற்கென் றெண்ணி

அஞ்ச நமன்றமர் பற்ற லுற்ற,

அற்றைக்கு நீயென்னைக் காக்க வேண்டும்

அரங்கத் தரவணைப் பள்ளி யானே! 4

காலனையும் படைத்தவனே!என்னைக் காத்திடு

427. பையர வினணைப் பாற்க டலுள்

பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி,

உய்ய வுலகு படைக்க வேண்டி

உந்தியில் தோற்றி னாய்நான் முகனை,

வைய மனிசரைப் பொய்யென் றெண்ணிக்

கால னையுமுட னேபடைத் தாய்,

ஐய!இனியென்னைக் காக்க வேண்டும்

அரங்கத் தரவணைப் பள்ளி யானே! 5

428. தண்ணென வில்லை நமன்ற மர்கள்

சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர்,

மண்ணொடு நீரு மெரியும் காலும்

மற்றுமா காசமு மாகி நின்றாய்,

எண்ணலாம் போதேயுன் நாம மெல்லாம்

எண்ணினே னென்னைக் குறிக்கொண் டென்றும்,

அண்லே!நீயென்னைக் காக்க வேண்டும்

அரங்கத் தரவணைப் பள்ளி யானே! 6

அஞ்சல் என்று என்னைக் காத்திடு

429. செஞ்சொல் மறைப்பொரு ளாகி நின்ற

தேவர்கள் நாயக னே!எம் மானே,

எஞ்ச லிலென்னு டையின் னமுதே

ஏழுல குமுடை யாய்!என் னப்பா,

வஞ்ச வுருவின் நமன்ற மர்கள்

வலிந்து நலிந்தென்னைப் பற்றும்போது,

அஞ்சலை யென்றென்னைக் காக்க வேண்டும்

அரங்கத் தரவணைப் பள்ளி யானே! 7

மதுரைப் பிறந்த மாமாயனே!என்னைக் காத்திடு

430. நானேது முன்மாய மொன்ற றியேன்

நமன்றமர் பற்றி நலிந்திட்டு,இந்த

ஊனே புகேயென்று மோதும் போதங்

கேதும்நா னுன்னை நினைக்க மாட்டேன்,

வானேய் வானவர் தங்க ளீசா!

மதுரைப் பிறந்த மாமாய னே,என்

ஆனாய்நீ யென்னைக் காக்க வேண்டும்

அரங்கத் தரவணைப் பள்ளி யானே! 8

ஆதியஞ்சோதியே!என்னைக் காக்கவேண்டும்

431. குன்றெடுத் தாநிரை காத்த ஆயா!

கோநிரை மேய்த்தவ னே!எம் மானே,

அன்று முதலின் றறுதி யா

ஆதியஞ் சோதி மறந்த றியேன்,

நன்றும் கொடிய நமன்ற மர்கள்

நலிந்து வலிந்தென்னைப் பற்றும் போது,

அன்றங்கு நீயென்னைக் காக்க வேண்டும்

அரங்கத் தரவணைப் பள்ளி யானே! 9

தூயமனம் தூமணிவண்ணனுக்கு ஆளாக்கும்

432. மாய வனைமது சூதனன் றன்னை

மாதவ னைமறை யோர்க ளேத்தும்,

ஆயர்க ளேற்றினை யச்சுதன் றன்னை

அரங்கத் தரவணைப் பள்ளி யானை,

வேயர் புகழ் வில்லிபுத் தூர்மன்

விட்டுசித் தன்சொன்ன மாலை பத்தும்,

தூய மனத்தன ராகி வல்லார்

தூமணி வண்ணனுக் காளர் தாமே. 10

அடிவரவு:துப்பு சாமிடத்து எல்லை ஒற்றை பை தண்ணென செஞ்சல் நான் குன்று மாயவனை - வாக்கு.



 



 


 


 



Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is மரவடியை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  வாக்குத்தூய்மை
Next