பொன்னியற்கிண்கிணி

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

முதற் பத்து

பொன்னியற்கிண்கிணி

பகவான் பக்தி சபலன். பக்தியுள்ளவர்கள் அழைத்தவுடன் எதிரில் வந்து நிற்பான். பெரியாழ்வார் அழைத்தால் எதிரில் வந்து நிற்பான். நச்சுவார்முன் நிற்கும் நாராயணன் அவன். யசோதைக்குக் கண்ணன்மீது அன்பு மிகுதி. குழந்தை தாயைக் கண்டவுடன் ஓடிவந்து அவளை அணைத்துக்கொள்ளும். குழந்தை கண்ணனும் அவ்வாறே வந்து தன்னை அணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறாள் யசோதை!

அச்சோப் பருவம்

(அணைத்துக்கொள்ள அழைத்தல்)

கலித்தாழிசை

மின்னியல் மேகம்

97. பொன்னியற் கிண்கிணி சுட்டி புறங்கட்டி,

தன்னிய லோசை சலன்சல னென் றிட,

மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற்போல்,

என்னிடைக் கோட்டரா அச்சோ அச்சோ

எம்பெரு மான்வாரா யச்சோ அச்சோ. 1

பஞ்சாயுதன்

98. செங்கம லப்பூவில் தேனுண்ணும் வண்டேபோல்,

பங்கிகள் வந்துன் பவளவாய் மொய்ப்ப,

சங்குவில் வாள்தண்டு சக்கர மேந்திய,

அங்கைக ளாலேவந் தச்சோ அச்சோ

ஆரத் தழுவாய்வந் தச்சோ அச்சோ. 2

பஞ்சவர் தூதன்

99. பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து,

நஞ்சுமிழ் நாகங் கிடந்தநற் பொய்கைபுக்கு,

அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட் டருள்செய்த

அஞ்சன வண்ணனே! அச்சோ அச்சோ

ஆயர் பெருமானே!அச்சோ அச்சோ. 3

கூனியின் கூனினை நிமிர்த்தவன்

100. நாறிய சாந்தம் நமக்கிறை நல்கென்ன,

தேறி யவளும் திருவுடம் பில்பூச,

ஊறிய கூனினை உள்ளே யடுங்க, அன்

றேற வுருவினா யச்சோ அச்சோ

எம்பெரு மான்!வாரா யச்சோ அச்சோ. 4

துரியோதனனை அழல விழித்தவன்

101. கழல்மன்னர் சூழக் கதிர்போல் விளங்கி,

எழலுற்று மீண்டே இருந்துன்னை நோக்கும்,

சுழலைப் பெரிதுடைத் துச்சோ தனனை,

அழல விழித்தானே!அச்சோ அச்சோ

ஆழியங் கையனே!அச்சோ அச்சோ. 5

ஸ்ரீ பார்த்தஸாரதி

102. போரொக்கப் பண்ணிஇப் பூமிப் பொறைதீர்ப்பான்,

தேரொக்க வூர்ந்தாய் செழுந்தார் விசயற்காய்,

காரொக்கு மேனிக் கரும்பெருங் கண்ணனே,

ஆரத் தழுவாய்வந் தச்சோ அச்சோ

ஆயர்கள் போரேறே!அச்சோ அச்சோ 6

சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறியவன்

103. மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்,

தக்கதி தன்றென்று தானம் விலக்கிய,

சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய,

சக்கரக் கையனே!அச்சோ அச்சோ

சங்க மிடத்தானே!அச்சோ அச்சோ. 7

நமுசியை வானில் சுழற்றியவன்

104. என்னிது மாயம்என் னப்ப னறிந்திலன்,

முன்னைய வண்ணமே கொண்டள வாயென்ன,

மன்னு நமுசியை வானிற் சுழற்றிய,

மின்னு முடியனே!அச்சோ அச்சோ

வேங்கட வாணனே! அச்சோ அச்சோ. 8

திருமறுமார்வன்

105. கண்ட கடலும் மலையு முலகேழும்,

முண்டத்துக் காற்றா முகில்வண்ணா ஒஎன்று,

இண்டைச் சடைமுடி யீச னிரக்கொள்ள,

மண்டை நிறைத்தானே அச்சோ அச்சோ

மார்வில் மறுவனே அச்சோ அச்சோ. 9

ஹம்ஸாவதாரம்

106. துன்னிய பேரிருள் சூழ்ந்துல கைமூட,

மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட,

பின்னிவ் வுலகினில் பேரிருள் நீங்க,அன்

றன்னம தானானே அச்சோ அச்சோ

அருமறை தந்தானே அச்சோ அச்சோ. 10

நாரணனைப் பாடுவார்

107. நச்சுவார் முன்னிற்கும் நாரா யணன்றன்னை,

அச்சோ வருகவென் றாய்ச்சி யுரைத்தன,

மச்சணி மாடப் புதுவைக்கோன் பட்டன்சொல்,

நிச்சலும் பாடுவார் நீள்வீசும் பாள்வரே. 11

அடிவரவு:பொன் செங்கமலம் பஞ்சவர் நாறிய சுழல் போர் மிக்க என்னிது கண்ட துன்னிய நச்சுவர்- வட்டு.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is தொடர்சங்கிலிகை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  வட்டு நடுவே
Next