திருவுக்கும்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஏழாம் பத்து

திருவுக்கும்

திருவழுந்தூர்-3

திருவழுந்தூர் ஆமருவியப்பனிடம் அடைக்கலம் அடைந்த ஆழ்வார் அகம் நெகிழ்ந்து பாடியுள்ள பகுதி இது.


எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆமருவியப்பா!நீயே அடைக்கலம்

1608. திருவுக் கும்திரு வாகிய செல்வா!

தெய்வத் துக்கர சே!செய்ய கண்ணா,

உருவச் செஞ்சுட ராழிவால் லானே!

உலகுண் டவொரு வா!திரு மார்பா,

ஒருவற் காற்றியுய் யும்வகை யென்றால்

உடனின் றைவரென் னுள்புகுந்து, ஒழியா

தருவித் தின்றிட அஞ்நின் னடைந்தேன்

அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே! 1

ஆமருவியப்பா!நின்னையே நான் சரணடைந்தேன்

1609. பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி

பாவை பூமகள் தன்னொடு முடனே

வந்தாய், என்மனத் தேமன்னி நின்றாய்

மால்வண் ணா!மழை போலொளி வண்ணா,

சந்தோ கா!பௌழி யா!தைத் திரியா!

சாம வேதிய னே!நெடு மாலே,

அந்தோ!நின்னடி யன் றிமற் றறியேன்

அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே! 2

ஐயா!நின் திருவடிகளையே நான் அறிவேன்

1610. நெய்யா ராழியும் சங்கமு மேந்தும்

நீண்ட தோளுடை யாய்,அடி யேனைச்

செய்யா தவுல கத்திடைச் செய்தாய்

சிறுமைக் கும்பெரு மைக்குமுன் புகுந்து,

பொய்யா லைவரென் மெய்குடி யேறிப்

போற்றி வாழ்வதற் கஞ்சிநின் னடைந்தேன்

ஐயா!நின்னடி யன்றிமற் றறியேன்

அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே! 3

ஆதிவராகனே!எனக்கு அடைக்கலம் தர யாருமில்லை

1611. பரனே!பஞ்சவன் பௌழியன் சோழன்

பார்மன் னர்மன்னர் தாம்பணிந் தேத்தும்

வரனே, மாதவ னே!மது சூதா!

மற்றோர் நல்துணை நின்னலா லிலேன்காண்

நரனே!நாரண னே!திரு நறையூர்

நம்பீ!எம்பெரு மான்!உம்ப ராளும்

அரனே, ஆதிவ ராகமுன் னானாய்!

அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே! 4

நின் திருவடியன்றி வேறொன்றும் அறியேன்

1612. விண்டான் விண்புக வெஞ்சமத் தரியாய்ப்

பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து,

பண்டான் உய்யவோர் மால்வரை யேந்தும்

பண்பா ளா!பர னே!பவித் திரனே,

கண்டேன் நான்கலி யுகத்ததன் தன்மை

கரும மாவது மென்றனக் கறிந்தேன்,

அண்டா!நின்னடி யன் றிமற் றறியேன்

அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே! 5

நான்கு யுகங்களாக ஆனவன் ஆமருவியப்பன்

1613. தேயா வின்தயிர் நெய்யமு துண்ணச்

சொன்னார் சொல்லி நகும்பரி சே பெற்ற

தாயா லாப்புண்டி ருந்தழு தேங்கும்

தாடா ளா!தரை யோர்க்கும்விண் ணோர்க்கும்

சேயாய், கிரேத திரேத துவாபர

கலியு கமிவை நான்குமு னானாய்,

ஆயா!நின்னடி யன்றிமற் றறியேன்

அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே! 6

ஐம்புல ஆசைகட்கு அஞ்சினேன்:காப்பாற்று

1614. கறுத்துக் கஞ்சனை யஞ்ச முனிந்தாய்!

கார்வண் ணா!கடல் போல்ஒளி வண்ணா

இறுத்திட் டான்விடை யேழும்முன் வென்றாய்

எந்தாய்!அந்தர மேழுமு னானாய்,

பொறுத்துக் கொண்டிருந் தால்பொறுக் கொண்ணாப்

போக மேநுகர் வான்புகுந்து, ஐவர்

அறுத்துத் தின்றிட வஞ்சிநின் னடைந்தேன்

அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே! 7

அழுந்தூர் அம்மானே:என்னை ஆட்கொள்

1615. நெடியா னே!கடி ஆர்கிலி நம்பீ!

நின்னை யேநினைந் திங்கிருப் பேனை,

கடியார் காளைய ரைவர் புகுந்து

காவல் செய்தவக் காவலைப் பிழைத்து,

குடிபோகந் துன்னடிக் கீழ்வந்து புகுந்தேன்

கூறை சோறிவை தந்தெனக் கருளி,

அடியே னைப்பணி யாண்டுகொ ளெந்தாய்!

அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே! 8

அழுந்தூர் அம்மானே!எனக்கு இரக்கம் காட்டு

1616. கோவாய் ஐவரென் மெய்குடி யேறிக்

'கூறை சோறிவை தா'என்று குமைத்துப்

போகார், நானவ ரைப்பொறுக் ககிலேன்

புனிதா!புட்கொடி யாய்!நெடு மாலே,

தீவாய் நாகணை யில்துயில் வானே!

திருமா லே!இனிச் செய்வதொன் யிரங்காய்

ஆவா வென்றடி யேற்கிறை யிரங்காய்

அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே! 9

மன்னும் விண்ணும் ஆள்வர்

1617. அன்ன மன்னுபைம் பூம்பொழில் சூழ்ந்த

அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானை,

கன்னி மன்னுதிண் டோள்கலி கன்றி

ஆலி நாடன்மங் கைக்குல வேந்தன்,

சொன்ன இன்தமிழ் நன்மணிக் கோவை

தூய மாலை யிவைபத்தும் வல்லார்,

மன்னி மன்னவ ராயுல காண்டு

மான வெண்குடைக் கீழ்மகிழ் வாரே. 10

அடிவரவு:திரு பந்தார நெய் பரனே விண்டான் தோயா கறுத்து நெடியானே கோவாய் அன்னம் -- செங்கமலம்.















 





 










 







 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is சிங்கமதாய்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  செங்கமலம்
Next