மூல பாஷை ஸம்ஸ்கிருதமே : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

வார்த்தையின் அர்த்தத்தைவிட சப்தம் முக்யம் என்று சொன்னேன். இதைச் சொல்லும் போது இன்னொன்றும் நினைவு வருகிறது. வார்த்தையின் சப்தமே அதன் அர்த்தத்தைக் காட்டும்படியாக அநேக பதங்கள் சந்தஸ் என்ற வேத பாஷையிலும், அதை வைத்தே உருவாக்கிய ஸம்ஸ்கிருதத்திலும் இருக்கின்றன. உதாரணமாக, ‘தந்தம்’ என்று ஒரு வார்த்தை இருக்கிறது. ‘பல்’ என்று அதற்கு அர்த்தம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். பல் நாக்கிலே நன்றாக அடித்து, அதாவது சப்தத்தை எழுப்புவதில் பல்லுக்கே முக்யமான வேலையைக் கொடுப்பதாக இந்த ‘தந்தம்’ என்ற வார்த்தையே அமைந்திருக்கிறது. தந்தம் போனவர்களை (பல் இல்லாதவர்களை) ‘தந்தம்’ என்று சொல்லச் சொல்லிப் பார்த்தால் தெரியும். அவர்களால் இந்த வார்த்தையை ஸ்பஷ்டமாகச் சொல்லவே முடியாது.

இந்தச் சின்ன விஷயத்திலிருந்து அநேக பாஷைகளை ஒப்பிட்டு ஆராய்ந்து எது முந்தி, எது பிந்தி என்று நிர்ணயிக்கிற Comparitive Philology க்கே முக்கியமான ஒரு ஸமாசாரம் தெரிகிறது. ஸம்ஸ்கிருதம், க்ரீக், லாடின் (லத்தீன்) , ஜெர்மன் (ட்யூடானிக் என்பது; இங்கிலீஷ் பாஷையும் ட்யூடானிக்கில் சேர்ந்ததுதான்) இன்றைய பிரெஞ்சு உள்பட அநேக பாஷைகளுக்கு மூலமான ஸெல்டிக் போன்ற பல மொழிகள் ஒரே தாய்பாஷையிலிருந்து வந்தவை என்று சொல்லி இவற்றை ‘இண்டோ யூரோபியன் குரூப்’ என்று ஃபைலாலஜியில் சேர்த்து வைத்திருக்கிறார்கள். எது தாய்ப்பாஷை என்பதில் மட்டும் முடிவான அபிப்ராயம் ஏற்படவில்லை. ஸம்ஸ்கிருதம் (இப்படிச் சொல்லும்போது வேத பாஷையான சந்தஸையும் சேர்த்துத்தான் சொல்லப்படுகிறது) தான் ஆதி பாஷை, தாய்பாஷை என்றால் அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் இப்போது சொன்ன ‘தந்தம்’ போன்ற வார்த்தைகள் ஸம்ஸ்கிருதம்தான் மூலபாஷை என்று சொல்வதற்குச் சான்றாக இருக்கின்றன.

Dental [டென்டல்] என்று இன்றைக்கு இங்கிலீஷில் சொல்வதும் பல்லைக் குறிப்பதுதான். ‘தந்த் – டென்ட்’ என்கிறதில் நிறைய ஒற்றுமை நமக்குத் தெரிகிறது . பிரெஞ்சு, லாடின் முதலான பாஷைகளிலும் ‘டென்ட்’ ஸம்பந்தமே தெரிகிறது. அதாவது ‘ட’ காரம் வருகிறதே தவிர, ஸம்ஸ்கிருதத்தில் உள்ள ‘தந்த’த்தில் வருகிற ‘த’ காரம் இல்லை. “இருந்துவிட்டுப் போகட்டும். இதனால் ஸம்ஸ்கிருதம் மூலபாஷை என்று எப்படி ஆகும்? ஏன் ‘டென்டல்’ என்பதிலிருந்துதான் ஸம்ஸ்கிருத ‘தந்தம்’ வந்தது என்று வைத்துக் கொள்ளக் கூடாது?” இப்படிக் கேட்டால், இங்கிலீஷ், பிரெஞ்சு, லாடீன் எல்லாவற்றுக்கும் ஸம்ஸ்கிருதமே தாய்ப்பாஷை என்பதற்கு ‘தந்தம்’ என்கிறதில் வருகிற சப்தங்களே ஆதரவாயிருக்கிறது. எப்படியென்றால் மேலே சொன்னது போல், “தந்தம்” என்பதைச் சொல்லவே தந்தம் (பல்) வேண்டியிருக்கிறது. ‘டென்டல்’ முதலான மற்ற பாஷை வார்த்தைகளைச் சொல்லிப் பாருங்கள். அதிலே பல் ஸம்பந்தமே இல்லை. நாக்கின் நுனி மேலண்ணத்தில் படுவதாலேயே ‘டென்ட்’ சப்தம் உண்டாயிருக்கிறது. வார்த்தையே அர்த்தத்தை குறிப்படுமானால், அது ஸம்ஸ்கிருத ‘தந்த’த்தில் தான். அதனால் இது தான் மூல ரூபம்; இதுதான் திரிந்து ‘டென்டல்’ வந்தது என்று தெரிகிறது.

இன்னும் சில வார்த்தைகளில், ஒன்றின் எழுத்துக்களை மாற்றுவதாலேயே அதோடு ரொம்பவும் ஸம்பந்தமுள்ள இன்னொன்றைக் குறிப்பிடும் வார்த்தை உண்டாகிறது. சிங்கத்துக்கு முக்யமான குணம் என்ன? ஹிம்ஸை செய்வது. “ஹிம்ஸ” என்ற எழுத்துக்கள் மாறியே ‘ஸிம்ஹ’ என்றாகியிருக்கிறது. ‘கச்யபர்’ ரிஷிகளுக்கெல்லாம் முதன்மையானவர். தேவஜாதி, அஸுர ஜாதி, மநுஷ்ய ஜாதி எல்லாவற்றுக்கும் மூல புருஷர். அவருக்கு ஏன் இந்தப் பேர் வந்தது? அவரே ஸத்யத்தைப் பார்த்தவர்; அதாவது உண்மையை உள்ளபடி அறிந்த ஞானி. ஞானத்தைப் பார்வை (த்ருச்யம்) என்றே சொல்வது வழக்கம். கச்யபரே “பார்த்தவர்”. “பார்த்தவர்” என்பதற்கு ஸம்ஸ்கிருத பதம் ‘பச்யக’ என்பது. ‘பச்யக’ என்பதன் எழுத்துக்களே மாறி ‘கச்யப’ என்று வந்தது. “பச்யக” தான் “பார்ப்பான்” என்பது! ஸத்ய தத்துவத்தைத் தெரிந்து கொண்டவர்கள் என்ற அர்த்தத்தில் பிராம்மண ஜாதிக்குத் தமிழிலே இப்படி உயர்ந்த பெயர் உண்டாயிற்று. இப்போது அதுவே மட்டந்தட்டுகிற வார்த்தையாக உபயோகிக்கப்படுகிறது.

 

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is விஞ்ஞான பூர்வமான யோகம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  உச்சரிப்பு விதிகள்
Next