ஸ்தல புராணங்களின் ஸத்தியத்வம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

வேதத்தில் என்ன சொல்லியிருந்தாலும் அது ஸத்தியம் என்று நம்ப வேண்டும் என்பது போல, சைவ – வைஷ்ணவங்களுக்குத் தமிழ் வேதமாக உள்ள தேவார-திவ்யப்ரபந்தங்களில் சொல்லியிருப்பதை நாம் உண்மையென்று ஒப்புக் கொள்ள வேண்டும். அநேக க்ஷேத்ரங்களில் பாடப்பெற்ற தேவாரங்களிலும் ஆழ்வார்களின் பாசுரங்களிலும் அந்தந்த ஸ்தல புராண விஷயங்கள் வருகின்றன. 1500 வருஷத்துக்கு முந்திய இந்த தேவார – திவ்யப்ரபந்தங்களிலேயே ஸ்தல புராணக் குறிப்புகள் இருப்பது அந்தப் புராணங்களின் பழமைக்குச் சான்றாக இருக்கிறது.

உதாரணமாக ஸ்ரீரங்கத்திலே பெருமாள் வேறு எந்த ஊரிலும் இல்லாத மாதிரி தெற்கே பார்த்துக் கொண்டிருக்கிறார். இதற்கு அந்த க்ஷேத்ர புராணத்தில் காரணம் சொல்லியிருக்கிறது. ஸ்ரீ ராமசந்திர மூர்த்திக்குப் பட்டாபிஷேகம் ஆனபிறகு விபீஷணன் லங்கைக்குத் திரும்பிப் போனபோது, ராமர் தாம் வழிபட்டு வந்த ரங்கநாத விக்ரஹத்தை அவனுக்கு கொடுத்தாரென்றும் அதுதான் ஒரு காரணத்தால் அவன் போகிறவழியில் உபயகாவேரிக்கு நடுவே ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டையாகி விட்டதென்றும், தன்னோடு லங்காபுரிக்கு எடுத்துப்போக முடியவில்லையே என்று துக்கப்பட்ட விபீஷணனைத் திருப்திப்படுத்தவே ஸ்ரீரங்கநாதர் தெற்கு நோக்கிப் படுத்திருக்கிறார் என்றும் ஸ்ரீரங்க ஸ்தல புராணத்தில் விரிவாகக் கதை சொல்லியிருக்கிறது. இந்த விஷயத்தை ஆழ்வார்கள் தங்கள் பாட்டில் சொல்கிறார்கள்.1

மஹாவிஷ்ணு தெற்கே பார்த்திருப்பதற்குப் புராணம் சொல்கிற காரணம் ஆழ்வார் காலத்திலேயே நிச்சயமாக இருந்திருக்கிறதென்றால் அந்தப் புராணம் அதற்கும் முந்தியதாகத்தானே இருக்க வேண்டும்?

காஞ்சீபுரத்தில் ஏகாம்பரநாதர் அம்பாளே பிடித்து வைத்துப் பூஜை பண்ணிய பிருத்வி [மண்ணாலான] லிங்கம்; ஸ்வாமி அவள் பூஜை பண்ணுகிறபோது பெரிய வெள்ளத்தைப் பிரவஹிக்கச் செய்தும் அவள் விடாமல் லிங்கத்தைக் கட்டிக்கொண்டாள்; அதிலிருந்து ஸ்வாமியே ஆவிர்பவித்தார் – என்று ஸ்தல புராணத்தில் இருப்பதைத் தேவாரமும் சொல்கிறது. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஏகம்பத்தில் பாடிய தேவாரத்தில் பாட்டுக்குப் பாட்டு அம்பாள் பூஜை பண்ணின மஹிமையைச் சொல்கிறார்.2

ஸ்ரீரங்கத்துக்குப் பக்கத்தில் இருக்கிற ஜம்புகேச்வரத்தில் (திருவானைக்காவில்) ஜம்பு மஹரிஷி என்பவர் ஜம்பு (நாவல்) விருக்ஷமாக ஆக, அதன் கீழேயே ஈச்வரன் வந்து கோயில் கொண்டார். அங்கே லிங்கத்துக்கு ஒரு சிலந்தி பந்தல் போட்டுப் பூஜித்தது. இந்த பந்தலை அறுத்துக் கொண்டு ஒரு யானை லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணிற்று. இதனால் சிலந்திக்கு ஆத்திரம் வந்து யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து கொண்டு அதன் மண்டைக்குள் போய் குடைந்தது. அப்போது யானை மண்டையை மோதிக் கொண்டு தானும் செத்து சிலந்தியையும் சாக அடித்து விட்டது. இந்த சிலந்தி தான் பிற்பாடு கோச்செங்கட் சோழனாக பிறந்து ஜம்புகேச்வர ஆலயத்தைக் கட்டிற்று. இந்தக் கதையை ஸ்தல புராணம் சொல்கிறது.

இத்தனைக்கும் தேவாரத்திலேயே reference இருக்கிறது. மூலஸ்தானத்தில் எப்போதும் காவேரி ஊற்று இருக்கும்படியான அற்புத ஸ்தலம் அது என்பதற்கு அப்பர் தேவாரம் ஒன்றில் பத்துப் பாட்டிலும் குறிப்பு இருக்கிறது.3

திருக்கழுக்குன்றத்தில் தினமும் மத்தியானம் பன்னிரண்டு மணிக்கு இரண்டு கழுகுகள் வந்து பண்டாரம் கொடுக்கிற சர்க்கரைப் பொங்கலைச் சாப்பிட்டு விட்டுப் போகிறதல்லவா? இது நூற்றாண்டுகளாக நடந்துவருகிறது என்று சொல்வதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறார்கள். இந்த ஊர் பேரே தேவார காலத்திலிருந்து “கழுக்குன்றம்” என்று இருக்கிறது. இதைவிடப் பெரிய ஆதாரம் என்ன வேண்டும்?

திருவிடைமருதூரில் தைப்பூச ஸ்நானம் விசேஷமானது என்று க்ஷேத்ர மாஹாத்மியத்தில் சொல்லியிருக்கிறது என்றால் இந்த விசேஷத்தை சுமார் 1300 வருஷங்களுக்கு முன்பு அப்பரும் சம்பந்தருமே பாடியிருக்கிறார்கள்.4

ஸ்ரீரங்கம், ஜம்புகேச்வரம், காஞ்சீபுரம், திருக்கழுக்குன்றம், திருவிடைமருதூர் போன்ற மஹாக்ஷேத்ரங்கள் புராதனமாக ப்ரஸித்தமானதால் அவற்றைப் பற்றிய புராண வழக்குகள் பழைய தமிழ் நூல்களில் வந்திருப்பதில் ஆச்சரியமில்லை என்று தோன்றலாம். சின்ன சின்ன க்ஷேத்ரங்களில் உள்ள சின்ன புராண ஐதிஹ்யங்களுக்குக் கூட பழைய தமிழ் மறைகளில் குறிப்பு இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

பிரஸித்தியடையாத சில க்ஷேத்ரங்களில் ரிஷிகளோ தேவர்களோ வண்டுகளாக இருந்து பூஜை பண்ணினதாக ஸ்தல புராணங்களில் இருக்கிறது. இப்போதும் அந்த ஊர்களில் சன்னதியிலேயே பெரிய தேனடைகள் இருந்து கொண்டிருக்கின்றன. நன்னிலத்தில் இப்படி இருக்கிறது. ‘மதுவனம்’ என்றே அதற்கு ஒரு பெயர் இருக்கிறது. (மது – தேன்) . திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்தில் சித்தாம்பூர் என்று சொல்கிற ஊர் இருக்கிறது. இதற்கு தேவாரத்தில் திருச்சிற்றேமம் என்று பெயர். இங்கேயும் ஸ்வாமி சன்னதியில் தேன்கூடு இருக்கிறது. ஸித்தர்கள் தேனீக்களாக வந்து பூஜிக்கிறார்கள் என்று ஐதிஹ்யம். இந்த தேனடைக்கும் தினந்ததோறும் பூஜை நடக்கிறது. வைஷ்ணவ திவ்ய தேசங்களில் திருக்கண்ண மங்கையில் தேனடையிருக்கிறது. இவற்றைப் பற்றி அந்தந்த ஊர் தேவார-திவ்யப்ரபந்தங்களிலும் reference இருக்கிறது.5

ஸ்தல புராண விஷயங்களை தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் முதலியவற்றில் குறிப்பிட்டிருப்பதால் அவற்றின் பழமை, பிராமாண்யம் (authenticity) இரண்டும் தெரிகின்றன.


1 குடதிசை முடியை வைத்துக்

குணதிசை பாதம் நீட்டி

வடதிசை பின்பு காட்டித்

தென்திசை யிலங்கை நோக்கி

கடல்நிறக் கடவுள் எந்தை

அரவணைத் துயிலுமாக் கண்டு

உடல் எனக்(கு) உருகுமாலோ?

என் செய்கேன் உலகத்தீரே!

(தொண்டரடிப்பொடி ஆழ்வார்)

 

2ஏலவார் குழலாள் உமைநங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற..

ஆற்றமில் புகழாள் உமைநங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற..

வரிகொள் வெள்வளையாள் உமைநங்கை மருவி ஏத்தி வழிபடப்பெற்ற..

கெண்டை யந்தடம் கண்ணுமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப்பெற்ற..

எல்லையில் புகழாள் உமைநங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற..

மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப்பெற்ற..

எண்ணில் தொல்புகழாள் உமைநங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற..

அந்தமில் புகழாள் உமைநங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற..

பரந்த தோல் புகழாள் உமைநங்கை பரவிஏத்தி வழிபடப்பெற்ற..

(வெள்ளம் வந்தபோது அம்பாள் லிங்கத்தைத் தழுவ, ஈஸ்வரன் ஆவிர்பவித்ததைக் குறிக்கும் பாடல்.)

எள்கல் இன்றி இமையவர் கோனை ஈசனை வழிபாடு செய்வாள் போல்

உள்ளத்துள்கி உகந்து (உ)மைநங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு

வெள்ளங்காட்டி வெருட்டிட வஞ்சி வெருவி ஓடித்தழுவ வெளிப் பட்ட

கள்ளக்கம்பனை எங்கள் பிரானைக் காணக்கண் அடியேன் பெற்றவாறே.

 

3சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழற் பந்தர் செய்து

உலந்தவன் இறந்தபோதே கோச்செங்க ணானுமாகக்

கலந்தநீர்க் காவிரிசூழ் சோணாட்டுச் சோழர்தங்கள்

குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே (அப்பர்)

வெண்ணாவலின் மேவிய எம் அழகா (சம்பந்தர்)

[வெண்ணாவல் : ஜம்பு விருட்சம்]

“செழு நீர்த் திரளைச் சென்றாடினேனே” (அப்பர்)

[இச் சொற்றொடர் பத்துப் பாட்டுக்களிலும் வருகிறது]

 

4 பூசம் புகுந்தாடிப் பொலிந்தழகாய

ஈசன் உறைகின்ற இடைமரு(து) ஈதோ! (சம்பந்தர்)

வருந்திய மாதவத்தோர் வானோர் ஏனோர் வந்தீண்டிப்

பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த (சம்பந்தர்)

ஈசன் எம்பெருமான் இடைமருதினில் பூச நாம் புகுதும் புனலாடவே (அப்பர்)

 

5 தேனார் வண்டு பண் செயும் திருஆரும் சிற்றேமத்தான் (ஞானசம்பந்தர்)

களிவண்டறையும் பொழில் கண்ண மங்கை யுட் கண்டுகொண்டேனே. (திருமங்கையாழ்வார்)

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is ஸ்தல புராணங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  பல வரலாறுகளிடை தொடர்பு
Next