தேவர்கள் தொழும் தேவதேவன் ”வாஸவாதி ஸகல தேவ வந்திதாய”: ’பூஸுராதி’ என்று பூமியிலே ஆரம்பித்தவர் இப்போது தேவலோகத்திலுள்ள நிஜ ஸுரர்களைப் பற

தேவர்கள் தொழும் தேவதேவன்

”வாஸவாதி ஸகல தேவ வந்திதாய”:

’பூஸுராதி’ என்று பூமியிலே ஆரம்பித்தவர் இப்போது தேவலோகத்திலுள்ள நிஜ ஸுரர்களைப் பற்றியே பாடுகிறார். ‘பூஸுராதி’ என்று கீழ் ஸ்தாயியில் கனமாகப் பொருத்தத்தோடு ஆரம்பித்தவர் இப்போது மேல் லோகவாஸிகளைப் பற்றி மேல் ஸ்தாயியில் லளிதமாக ஸாஹித்யத்தைக் கொண்டு போயிருக்கிறார்.

என்ன அர்த்தமென்றால், “வாஸவன் என்கிற இந்திரன் முதலான எல்லா தேவர்களாலும் வணங்கப் படுபவர்” ஸுப்ரஹ்மண்யர். அஷ்டவஸுக்கள் என்று தேவர்களில் ஒரு க்ளாஸ். அவர்கள் இந்திரனுக்குப் பரிவாரமாயிருப்பவர்கள். அதனால் அவன் வாஸவன். ஸாதாரணமாக, ‘ரகு’வின் வம்சத்தில் வந்தவன் ‘ராகவன்’, ‘ப்ருகு’ வம்சத்தில் வந்தவன் ‘பார்க்கவன்’ என்றுதான் இருக்கும். இங்கே வஸு வம்சத்தில் வராமல் அவர்களுக்கு அதிபதியாக இருக்கப்பட்ட இந்த்ரனுக்கு ‘வாஸவ’ப் பேர் இருக்கிறது.

இந்த்ரன் தேவராஜா. அவனே நமஸ்கரிக்கிறானென்றால், ‘யதா ராஜா ததா ப்ரஜா’ என்று எல்லா தேவர்களும் நமஸ்காரம் பண்ண வேண்டியதுதானே? அதுதான் ‘வாஸவாதி ஸகல தேவ வந்திதாய’.

சூரபத்மா தேவர்களை அடித்துத் துரத்திவிட்டு இந்த்ரனின் ஸிம்ஹாஸனத்தை அபஹரித்த போது, தேவர்களெல்லோரும் தங்களுக்கு மஹாசக்தனான ஒரு ஸேநாநாயகன் வேண்டுமென்று ப்ரார்த்தனை பண்ணித்தான் ஈச்வரன் ஸுப்ரஹ்மண்யரைப் படைத்தது. அதனால் அவர்கள் அவரை ரொம்பவும் பூஜிக்கத்தானே வேண்டும்?

பூஜித்தது மட்டுமில்லை. இந்த்ரன் தன்னுடைய குமாரியான தேவஸேனையை ஸுப்ரஹ்மண்யருக்கே கன்யாதானம் பண்ணி அவரை மாப்பிள்ளையாக்கிக் கொண்டுவிடுகிறான். தேவர்களுக்கு ஸேநாபதியாயிருப்பவர் ‘தேவஸேநா-பதி’யாகவும் ஆகிறார். அதைத்தான் பாட்டில் பிற்பாடு ‘தேவராஜ ஜாமாத்ரே’ என்று சொல்லியிருக்கிறது. ‘தேவராஜனின் ஜாமாதா அதாவது மாப்பிள்ளைக்கு, நமஸ்காரம்’ என்று சொல்லியிருக்கிறது………