எல்லோருக்கும் பொதுவான ஸ்வாமி ”பூஸுராதி ஸமஸ்தஜன பூஜிதாப்ஜ சரணாய”: ”பிராமணர் முதலான எல்லா மக்களாலும் பூஜிக்கப்படும் தாமரைப் பாதங்களை உ

எல்லோருக்கும் பொதுவான ஸ்வாமி

”பூஸுராதி ஸமஸ்தஜன பூஜிதாப்ஜ சரணாய”:

”பிராமணர் முதலான எல்லா மக்களாலும் பூஜிக்கப்படும் தாமரைப் பாதங்களை உடையவர்.” “சரணாய” – பாதங்களை உடையவருக்கு, “நம:” – நமஸ்காரம் என்று, பல்லவியில் வரும் ‘நமஸ்தே’யோடு சேரும்.

“பூஸுராதி” – பிராமணர் முதலிய. ‘பூஸுரர்’ என்றால் பிராமணர். ‘ஸுரர்’ – தேவர்கள். யாகம் செய்து தேவர்களை பூமிக்கு வரவழைப்பதால், அவர்களுடைய அநுக்ரஹத்தால் பூமிக்குப் பலவித க்ஷேமங்களை உண்டாக்குவதால் பிராமணரை ‘பூஸுரர்’ என்பது. அந்தக் கடமையைச் சரியாகச் செய்தால்தான் இந்தப் பட்டம். இல்லாவிட்டால் ‘ப்ரம்ம பந்து’ என்று கேலிப் பேர்தான். ‘ப்ராமணர்களுக்கு உறவுக்காரன்’ என்று அர்த்தம். என்ன கேலி புரிகிறதோல்லியோ? இவனை பிராமணன் என்று சொல்வதற்கான லாயக்கு இவனுக்கு இல்லை. ஆனால் இவன் எந்தக் குடும்பத்தில் பிறந்திருக்கிறான், இவனுக்கு உறவுக்காரர்கள் யார் என்று பார்த்தால் அவர்களெல்லாம் பிராமணராயிருக்கிறார்கள். அதனால் இவனை ‘ப்ரம்ம பந்து’ என்று வேண்டுமானால் சொல்லிவிட்டுப் போகலாமென்று அப்படிப் பேர் சொல்வது!

பிராமணரின் ஸ்வாமி ஸுப்ரஹ்மண்யர். ஆரம்பத்திலேயே பார்த்த ஸமாசாரம். ‘மஹீதேவ தேவ’ரே ‘பூஸுர பூஜிதர்’. அப்படியானால் பிராமணருக்கு மட்டுந்தான் ஸ்வாமியா என்றால் அப்படியில்லை. அத்தனை ஜாதி ஜனங்களுக்கும் அவர் ஸ்வாமி. அவருடைய இரண்டு பெண்டாட்டிகளில் ஒருத்தி ஸுரமகள், ஒருத்தி குறமகள் என்று சொல்வார்கள். ஜீவ வர்க்கம் முழுவதற்கும் அவர் ஸ்வாமி. அவர் த்ராவிட ஸ்வாமிதான், தமிழ்த் தெய்வம் என்று ஒருத்தர் சொல்கிறார். இன்னொருத்தர் அவர்தான் ப்ராமண ஸ்வாமி, பேரே ஸுப்ரஹ்மண்யர் என்கிறார். வாஸ்தவத்தில் அவர் எல்லார் ஸ்வாமியுந்தான். தீக்ஷிதர் இந்தக் கக்ஷிதான். இதுதான் நமக்கு மனஸுக்குப் பிடித்திருக்கிறது. சண்டை சாடி இல்லாமல் ஸர்வ ஜன ஐக்கியத்தை உண்டாக்குவதாக இருக்கிறது. ஸ்வாமியின் பேரில் நாமெல்லாம் ஒன்று சேரத்தான் வேண்டுமே தவிர, கக்ஷி ஆடிக் கொண்டு பிரிந்து போகக் கூடாது. ‘பூஸுராதி ஸமஸ்தஜன’ என்றபடி அவர் சரணத்தில் ஸமஸ்த ஜனங்களும் அன்பிலே ஒன்று சேரணும்.