கோ ஸம்ரக்ஷணம் (பசு பராமரிப்பு) தாயாக விளங்கும் பசு வாயில்லா ஜீவன் என்று சொல்லப்படுகிற வர்க்கத்தைச் சேர்ந்ததே பசு; அப்படியிருந்

கோ ஸம்ரக்ஷணம்
(பசு பராமரிப்பு)
தாயாக விளங்கும் பசு


வாயில்லா ஜீவன் என்று சொல்லப்படுகிற வர்க்கத்தைச் சேர்ந்ததே பசு; அப்படியிருந்தாலும் அது ‘அம்மா’ என்று அடிவயிற்றிலிருந்து வாய்விட்டுக் குரல் கொடுக்கிறது. ‘அம்மா’ என்று சொல்கிற அந்தப் பசுவே நமக்கெல்லாம் அம்மாவாக இருக்கிறது. அம்மாவின் முதல் லக்ஷணம் என்ன? பால் கொடுப்பதுதான். நாம் குழந்தையாயிருந்த போது நம்மைப் பெற்றெடுத்த தாயார் நமக்குப் பாலூட்டி உயிரூட்டினாள். அந்தக் குழந்தைப் பிராயத்திலேயே பசுவும் நமக்குப் பால் கொடுத்து ப்ராண ரக்ஷை தந்தது. பெற்ற தாய் பால் கொடுப்பது நம்முடைய குழந்தைப் பருவத்தோடு முடிந்துவிட்டது. ஆனால் நமக்கு வயதான பின்னரும் பசு தரும் பாலும், அதிலிருந்து பெறப்படுகிற தயிர், மோர், நெய் ஆகியனவும் நம் ஆஹாரத்தில் தொடர்ந்து இடம் பெறுகின்றன. ரொம்பவும் வயஸான தசையிலும், மற்ற ஆகாரங்கள் குறைந்து அல்லது நின்றே போன நிலையிலும் ஒரு மனிதருடைய உடலில் உயிரை நிறுத்திக் கொடுக்கும் உணவாகப் பசு தருகிற பாலே இருக்கிறது. நம்முடைய ஆயுஸின் ஆரம்பத்தில் ஒரு குறுகிய காலகட்டத்தில் மாத்திரம் நம்மைப் பெற்றெடுத்த தாய் பால் தருகிறாளென்றால் பசுவோ நம்முடைய ஆயுள்காலம் பூராவும் பால் தருகிறது. அதனால்தான் உறவுகளிலேயே பரமோத்தமமான தாயுறவைப் பசுவுக்குத் தந்து ‘கோமாதா’ என்றே சொல்வது.
கோ’ என்றால் ‘பசு’ என்று எல்லோருக்கும் தெரியும். Cow என்ற வார்த்தையும் ‘கோ’விலிருந்து வந்தது தான். டிக்‌ஷனரியிலேயே அப்படித்தான் போட்டிருக்கும்.
அந்த கோவை மாதாவாகவே நம்முடைய தேசத்தில் தொன்றுதொட்டுக் கண்டு அன்பும் பக்தியும் செலுத்தியிருக்கிறார்கள்.
அன்பும் சாந்தமும் நிறைந்த தோற்றத்தோடு நிற்கிற ஒரு பசுவைப் பார்த்தாலே பெற்ற தாயாரைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்ச்சி தோன்றும்.
பெற்றெடுத்துப் பாலூட்டும் மாதாவை ஜனக மாதா என்பது. அதே மாதிரி இன்னும் ஒரு சில மாதாக்களைச் சொல்வதில்தான் கோமாதாவும் ஒன்று. பூமாதா, ஸ்ரீமாதா என்று இன்னும் இரண்டு மாதாக்கள்.