ப்ரம்மாவை உள்ளடக்கி த்ரிமூர்த்தியர் ஏற்பட்ட காரணம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

பூர்ண சக்தர்களான சிவ – விஷ்ணுக்களுடன் ப்ரஹ்மாவும் சேர்ந்து த்ரிமூர்த்திகள் என்று இருப்பதற்கு காரணமே வேறே. (அது) என்னவென்றால் ……..

பரப்ரஹ்மம் என்றும் பரமாத்மா என்றும் நாம் சொல்கிற ஏக வஸ்துவானது மாயையோடு கூடி லோகலீலை செய்வதற்கும், மாயையிலிருந்து ஜீவனை விடுவித்து ஞான மோக்ஷம் தருவதற்கும் தனித்தனி ரூபங்கள் எடுத்துக் கொள்வதென்று ஸங்கல்பம் பண்ணிற்று. ரூபமும் கார்யமுமில்லாமல் ஏக சைதன்யமாக இருக்கிற பரமாத்மா ரூபம் எடுத்துக்கொள்வது, கார்யம் செய்வது என்று வந்தால் உடனே பல தினுசாக விநோதங்கள் பண்ணிப் பார்க்க ஆரம்பித்துவிடுவார். அதன்படி இப்போது மாயா ஜகத்துக்காகவும் ஞான மோக்ஷத்திற்காகவும் ரூபங்கள் எடுப்பது என்று உத்தேசம் பண்ணும்போதே இந்த ஒவ்வொன்றுக்கும் புருஷ ரூபமாகவும், ஸ்திரீ ரூபமாகவும் இரண்டிரண்டு ரூபங்கள் இருக்க வேண்டுமென்றும் தீர்மானித்தார். அதன்படியே மஹாவிஷ்ணுவும் அம்பாளும் மாயலீலைக்கு தெய்வங்களாகத் தோன்றினார்கள். இருவர் கார்யமும் ஒன்றேதான். ரூபத்திலும் இரண்டு பேரும் நீலமேக ச்யாமளமானவர்கள். இப்படி ஒரே மாதிரி ரூபத்தோடும், குணத்தோடும் சேர்ந்து பிறந்ததால் அவர்கள் ஸஹோதர ஸஹோதரியாவார்கள். இதேபோலப் பரமசிவனும் ஸரஸ்வதியும் மாயையிலிருந்து விடுவிக்கும் ஞானத்துக்கு தெய்வமாக, சேர்ந்து தோன்றிய ஸஹோதர ஸஹோதரி ஆவார்கள். இரண்டு பேரும் வெள்ளை வெளேரென்று இருப்பவர்கள்.

இப்படித் தோன்றிய பிறகு பரமாத்மா ‘இந்த மாதிரி ஒரேயடியாகப் பிரிந்து மாயைக்கு ஒரு ஸஹோதர ஜோடி, ஞானத்திற்கு ஒரு ஸஹோதர ஜோடி என்று வைத்துவிட்டால் ஒரு ஜோடிக்கு இன்னொரு ஜோடி முழுக்க பேதம் என்ற மாதிரி ஆகிவிடும். அதோடு ஒன்று ஞானத்திற்கு மட்டும்தான், இன்னொன்று மாயைக்கு மட்டும்தான் என்றால் இரண்டுமே பூர்ண ப்ரஹ்ம சக்தி இல்லை என்றும் ஆகிவிடும். இப்படி ஆகாமல், இரண்டு ஜோடிக்குமே இந்தக் கார்யம்தான் முடியும் என்று குறுக்காமல் அவை பூர்ண சக்தியோடு இருக்கட்டும்; எந்த விதமான அநுக்ரஹத்தையும் பண்ணக்கூடியவையாக அவை இருக்கட்டும்; ஆனாலும் முக்யமாக ஒன்று மாயைக்கும் மற்றது ஞானத்திற்கும் தெய்வமாக இருக்கட்டும்’ என்று நினைத்தார்.

பல தினுஸான வித்யாஸங்கள் காட்டி விளையாடுவதே அவர் வழக்கமல்லவா? அதன்படி இப்போதும் கொஞ்சம் பண்ணினாரென்று வைத்துக்கொள்ளலாம். அதாவது விஷ்ணு, அம்பாள், சிவன் ஆகிய மூன்று பேர் மட்டும் பூர்ண ப்ரஹ்ம சக்தியோடு ஸகலவித அநுக்ரஹங்களும் செய்யக் கூடியவர்களாக இருந்துகொண்டே முக்யமாக ஒவ்வொரு கார்யத்தைப் பண்ணுவதென்றும், ஸரஸ்வதி மோக்ஷத்துக்கான ஞானத்தை அளிப்பது மாத்திரமில்லாமல் எல்லாவிதமான கலைகளுக்கும் சாஸ்த்ரங்களுக்கும் தெய்வமாக இருக்கட்டுமென்றும் வைத்தார்.

இன்னொன்றும் நினைத்தார். ‘அண்ணா – தங்கை ஜோடிகள் என்று தனித்தனியாகப் பிரித்து வைத்து முடித்துவிடாமல், அந்த ஜோடிகளுக்கு ஒன்றோடொன்று உறவு ஏற்படுத்திவிட வேண்டும். இந்த தெய்வங்களையெல்லாம் ஒன்றுக்கொன்று உறவாக்கிவிட வேண்டும். அப்போதுதான் லோகத்தில் ஒரேயடியாக தெய்வ பேதம் பாராட்டாமல் ஸமரஸமாகப் பார்த்து எல்லாவற்றிடமும் பக்தி செலுத்தமுடியும்’ என்றும் நினைத்தார்.

உறவு எப்படி ஏற்படுத்துவது? கல்யாண ஸம்பந்தத்தால் தானே? ஆனால் இப்படிப் பண்ணுவதற்கு ஒரு தடங்கல் இருந்தது. ஒரு அண்ணா – தங்கை ஜோடி இன்னொரு அண்ணா – தங்கை ஜோடியோடு கல்யாண ஸம்பந்தம் செய்து கொள்வதென்றால் அப்போது பெண் கொடுத்துப் பெண் வாங்கியதாக ஆகிவிடும். இது சிலாக்யமானதல்ல.

இந்தச் சிக்கலை சமாளிப்பதற்கு வழியாக இன்னொரு ஸஹோதர ஜோடித் தெய்வங்களை உண்டாக்க வேண்டி வந்தது. மூன்று ஸஹோதர ஜோடிகள் இருந்தால் அப்போது தம்பதியாக ஜோடி சேர்க்கும்போது பெண் கொடுத்துப் பெண் வாங்கவேண்டிய நிர்ப்பந்தம் இருக்காது. 1 – 1, 2 – 2 என்று இரண்டே ஸஹோதர ஜோடிகளிருந்து, அவற்றுக்கிடையில் தம்பதி ஜோடி சேர்க்கணுமென்றால் அப்போது 1 – 2, 2 – 1 என்று பரஸ்பரப் பரிவர்த்தனை பண்ணிக்கொள்வது தவிர வேறே வழியேயில்லை. ஆனால் 1 – 1, 2 – 2, 3 – 3 என்று ஸஹோதர ஜோடிகளிருந்தால் அவற்றுக்கிடையில் 1 – 2, 2 – 3, 3 – 1 என்று தம்பதி ஜோடி சேர்த்துப் பரஸ்பரப் பரிவர்த்தனையைத் தவிர்த்து விடலாமல்லவா? அதாவது பெண் கொடுத்துப் பெண் வாங்கிக்கொள்வதைத் தவிர்த்துவிடலாமல்லவா?

இதை உத்தேசித்துத்தான் பரமாத்மா ப்ரஹ்மாவும் லக்ஷ்மியும் தோன்றும்படிப் பண்ணினதே. இவர்களும் ஒரு ஸஹோதர ஜோடி. இரண்டு பேரும் ஸ்வர்ண வர்ணம்; தாமரைப் பூவில் உட்கார்ந்திருப்பவர்கள்.

ப்ரஹ்மாவுக்கு லக்ஷ்மி அம்மா என்றுதான் கேள்விப்பட்டிருப்பீர்கள். நான் இப்போது புதுக்கதை சொல்கிறேன்! புதிசாக இருந்தாலும் ரொம்பவும் பழசான புராணக் கதைதான்.*

அப்புறம் இந்த மூன்று ஸஹோதர ஜோடிகளுக்குள் சிக்கலில்லாமல் விவாஹ ஸம்பந்தம் பண்ணிக்கொள்ள முடிந்தது. உங்களுக்கே தெரிந்த கதைதான் – ப்ரம்மா சிவ ஸஹோதரியான ஸரஸ்வதியையும், விஷ்ணு ப்ரம்மாவின் ஸஹோதரியான லக்ஷ்மியையும், சிவன் விஷ்ணு ஸஹோதரியான அம்பாளையும் கலியாணம் பண்ணிக்கொண்டார்கள். இதிலே யாரும் பெண் கொடுத்துப் பெண் வாங்கவில்லையல்லவா?

சிக்கலைத் தீர்ப்பதற்காகவே ப்ரம்மாவும் லக்ஷ்மியும் தோன்றியது இருக்கட்டும். தெய்வம் என்று தோன்றிய பிறகு அவர்களுக்கும் ஒரு கார்யத்தைக் கொடுத்துத்தானே ஆகவேண்டும்?

ஆனால் மாயா சக்தியினால் ஜகத்தை நடத்துவது, ஞான சக்தியினால் மோக்ஷம் அநுக்ரஹிப்பது என்ற இரண்டிலேயே ஸகல கார்யங்களும் அடங்கிவிடுகின்றன. ஆகையினால் இந்த இரண்டுக்குள்ளேயேதான் கொஞ்சம் பங்குபோட்டு ப்ரஹ்மாவுக்கும் லக்ஷ்மிக்கும் கொடுக்கவேண்டும். ஞானத்தையோ பங்கே போடமுடியாது. ஆகையால் மாயா ஜகத் வியாபாரத்தில்தான் சில அம்சங்களை இந்த இரண்டு பேருக்குக் கொடுக்கவேண்டும்.

இப்படி ஏற்பட்டதில்தான் விஷ்ணு தம்முடைய கார்யத்திலேயே ஸ்ருஷ்டி என்பதைப் பிரித்தாற்போலக் காட்டி அதை ப்ரஹ்மாவின் கார்யமாகக் கொடுத்தார். தாம் நடத்துகிற லோக பரிபாலனத்தில் ஜீவர்களுக்குச் செல்வம் கொடுக்கும் கார்யத்தை லக்ஷ்மிக்குத் தந்தார். தினுஸு தினுஸாக வித்யாஸம் செய்து விளையாடுகிற வழக்கப்படி இங்கேயும் லக்ஷ்மிக்கு லோக மாதா என்ற பெரிய ஸ்தானம் இருக்கும்படியான அநுக்ரஹ சக்திகளைக் கொடுத்தார். தம்முடைய கார்யத்தில் ஸ்ருஷ்டியம்சத்தை மாத்திரம் தமக்கு அடங்கித்தான் ப்ரஹ்மா நிர்வாஹம் செய்கிறாரென்று லோகத்துக்குத் தெரியும்படியாக, அந்த ஸ்ருஷ்டி கர்த்தாவையும் ஸ்ருஷ்டிக்கும் பிதாவாகத் தாம் ஸ்தானம் வஹித்துத் தம்முடைய நாபி கமலத்திலிருந்தே அவரைத் தோன்றுமாறு பண்ணினார்.

இப்போது புரிகிறதல்லவா, த்ரிமூர்த்திகள் என்ற ஏற்பாட்டில் பூர்ண ப்ரஹ்ம சக்தி பொருந்திய சிவ – விஷ்ணுக்களோடு நமக்கு அப்படித் தெரியாத ப்ரஹ்மாவும் எப்படி இடம் பெற்றார் என்று? மூன்றாவது ஜோடி ஸஹோதரர்கள் இருக்கவேண்டும் என்ற ‘நெஸஸிடி’ க்காகவே அவர் தோன்றியது. இந்த உபகாரம் செய்ததற்காக மற்ற இரண்டு பேரும் அவருக்கு ஸமஸ்தானம் கொடுத்த மாதிரித் தங்களோடு வைத்துக்கொண்டு த்ரிமூர்த்திகள் என்று இருக்கிறார்கள்.

அதனால்தான் அவருக்கு மற்ற தேவதைகளைவிட சிவ – விஷ்ணுக்களிடம் நெருக்கம் இருப்பது. அதோடுகூட அவருக்கு ஸகல வேத ஞானமும் இருக்கும்படியாகவும், அவர் ப்ரஹ்ம வித்யா குருக்களில் ஒருவராக இருக்கும்படியாகவும் பரமாத்மா சக்திகளைக் கொடுத்தார்.

இருந்தாலும் கடைசியில் அவருக்குக் கோவில் இல்லாமல் பண்ணி விளையாடிவிட்டார்!

‘பிரஜாபதி, ஹிரண்யகர்ப்பன், ப்ரஹ்மா என்றிப்படி வேத, உபநிஷத, புராணங்களில் போற்றப்படும் பெரியவருக்குப் பூஜை நடப்பதென்றால் அதற்குரிய கௌரவத்தோடு நடக்கவேண்டும். அதற்கில்லையென்றால் ஒப்புக்குக் ‘காமா சோமா’ என்று நடப்பதைவிட நடக்காமலேயிருப்பது நல்லது. இதனால் அவருக்கு ஒன்றும் நஷ்டமில்லை. தகப்பனார்காரர் அவரை நாபி கமலத்தில் வைத்துக் கொண்டு தாங்கு தாங்கென்று தாங்குகிறார். வாயிலேயோ ஜகத்தையெல்லாம் வாழ்விக்கும் வேதம் இருக்கிறது. அதனால், அவருக்காகவும் கோவில் வேண்டாம், இவர்கள் (ஜனங்கள்) மனோபாவத்தை உத்தேசித்தும் கோயில் வேண்டாம். இவர்களுடைய பி(ய்) க்கல் – பிடுங்கல் இல்லாமல் அந்த ஒரு ஸ்வாமியாவது நிம்மதியாக இருக்கட்டும்’ என்றே (பிரம்மாவுக்கு ஆலயமில்லாமல்) செய்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம்.


* உதாரணமாக, ‘தேவீ மாஹாத்மிய’ பாராயணத்தின் இறுதிப் பகுதியில் வரும் ‘ப்ராதாநிக ரஹஸ்யத்தில்’ விஷ்ணு – அம்பிகை, சிவன் – ஸரஸ்வதி, பிரம்மா – லக்ஷ்மி ஆகியோர் ஸஹோதர ஜோடிகளாகத் தோன்றியதாகவே உள்ளது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ப்ரம்மாவுக்கு மட்டும் ஏன் விலக்கு?
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ஸரஸ்வதிக்கு ஆலயம் இல்லாததேன்?
Next