ஸர்வரோக நிவாரணி : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஜாதிமுறையினால் பிரிந்திருந்ததால் முன்னே தேசத்தில் ஒருத்தருக்கொருத்தர் விரோதமாக இருக்கவே இல்லை. இப்போது தான் ஸ்டேட்டுக்கு ஸ்டேட் [மாநிலத்துக்கு மாநிலம]) குத்துப்பழி வெட்டுப் பழியாக எல்லைத் தகராறு, ஆற்று ஜலப் பங்கீட்டுத் தகராறு எல்லாம் ஏற்பட்டிருக்கின்றன. முன்னே காசி யாத்ரீகனுக்காக இங்கே செட்டிப் பிள்ளைகள் சத்திரம் கட்டி வைத்துச் சாப்பாடு போட்டார்கள். இங்கிருந்து காசிக்கும் பத்ரிநாத்துக்கும் போகிறவனுக்காக ஸேட்ஜி தரம்சாலா [தர்மசாலை] வைத்திருந்தான். அதாவது ஈச்வர பக்தியால் எல்லாரும் ஒன்று சேர்ந்து இருந்தார்கள். இப்போது அதுபோய் பாலிடிக்ஸ், புத்தி வாதம் ஆகியன அதிகமாகி விட்டதால்தான் எல்லாமே கோளாறாகி இருக்கிறது.

அதனால் கடைசியில் எல்லாவற்றுக்கும் மருந்தாக, ஸர்வரோக நிவாரணியாக, தேசத்தில் பக்தி வளரவேண்டும் என்றுதான் பிரார்த்தனை பண்ணவேண்டும்.

“ஜாதி ஒழியணும், ஜாதி ஒழியணும்” என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பதால், இன்னும் ஜாஸ்தி துவேஷம்தான் உண்டாகிக் கொண்டிருக்கிறது. முப்பது, நாற்பது வருஷமாக இந்தப் பிரசாரம் பண்ணி வந்தாலும்* ஒரு எலக்ஷன் என்று வருகிறபோது இப்போது பார்த்தாலும் ஜாதிதான் முன்னால் நின்று, ஒரு கம்யூனிட்டிக்காரன் இன்னொருவனை அடிப்பது, கத்தியால் குத்துவது என்கிற அளவுக்குப் போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இது பிராம்மண- அப்பிராம்மண ஜாதித்வேஷம் இல்லை. பிராம்மணனை நல்ல வேளையாக பாலிடிக்ஸிலிருந்து ரொம்ப தூரத்துக்கு வெளியே தள்ளியிருக்கிறது. இவனாக விலகாவிட்டாலும் மற்றவர்களாவது இப்படிக் கழுத்தைப் பிடித்துத் தள்ளியிருக்கிறார்களே என்று கொஞ்சம் ஆறுதலாயிருக்கிறது. அதனால் இப்போது நடக்கிற சண்டை மற்ற ஜாதிகளுக்குள்ளேயே தான்! தெலுங்கு தேசத்தில் கம்மாவுக்கும் ரெட்டிக்கும் சண்டை; கன்னட தேசத்தில் லிங்காயத்துக்கும் இன்னொரு ஜாதிக்கும் சண்டை என்கிற மாதிரி சாஸ்திரங்களில் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத விபரீத ஜாதிச் சண்டைகளையெல்லாம் ‘ஈக்வாலிடி’ முழக்கம் ரொம்ப ஜாஸ்தியாகவுள்ள இப்போதுதான் பார்க்கிறோம். இங்கே (தமிழ்நாட்டில்) ஒரு ஜில்லாவில் படையாட்சி, இன்னொன்றில் கௌண்டர், இன்னொன்றில் தேவர், முக்குலத்தார், இன்னொன்றில் செங்குந்தர் என்று இப்படி ஒவ்வொரு ஜாதிக்காரர்களையே பார்த்து அபேட்சகராக நிறுத்துகிறார்கள். Candidate [வேட்பாளர்] களுக்கிடையே அரசியல் கொள்கையையெல்லாம் விட்டுவிட்டு, இந்த ஜாதி அடிப்படையிலேயே போட்டா போட்டி நடப்பதைப் பார்க்கிறோம்.


* 1965 ல் கூறிய‌து.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is நான் சொல்வதன் நோக்கம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  'ஒழியணும்'மறைந்து 'வளரணும்' வளரட்டும்!
Next