சிக்கனத்துக்கு மூன்று உபாயம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

பண சம்பந்தத்தால் சாஸ்திரோக்த வாழ்க்கையே கெட்டுப் போய்விட்டது. சாஸ்திரோக்தமாக மாறுவதற்கு நாம் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றில்லாமல் பண்ணிக் கொண்டு விட்டால் போதும்.

எனக்கு மூன்று விதத்தில் செலவைக் குறைக்கலாம் என்று தோன்றுகிறது (1) எல்லோரும் — நல்ல பணக்கார வீட்டு ஸ்திரீகளுள்பட — பட்டு முதலான பகட்டுத் துணிகளைவிட்டு கடைசித்தரமான வஸ்திரந்தான் வாங்குவது என்று வைத்துக் கொள்ள வேண்டும். (2) காப்பிக்குத் தலைமுழுகிவிட்டு காலையில் கோதுமைக் கஞ்சிதான் சாப்பிடுகிறதென்று வைத்துக் கொள்ளவேண்டும். அல்லது மோர் சாப்பிடலாம். காப்பி சாப்பிடுவது என்ற ஒரு பழக்கத்தைப் பண்ணிவிட்டதால் Substitute (அதை மாற்ற ஏதாவது ஒன்று) வேண்டுமல்லவா? தக்ரம் (மோர்) அமிருதமென்று வைத்திய சாஸ்திரம் சொல்கிறது. இப்படிச் செய்வதனால் அநேக குடும்பங்களில் செலவில் நூற்றுக்கு அறுபது பங்கு குறைந்துவிடும் என்று தோன்றுகிறது. ‘அரிசி எவ்வளவு ரூபாய்க்கு வாங்குகிறோம்? பால், காப்பிக் கொட்டை எவ்வளவு வாங்குகிறோம்?’ என்று கணக்கு பார்த்தால் பால், காப்பிக்கொட்டைக்குத்தான் அதிக செலவு. (3) விவாஹத்துக்காகப் பணத்தைக் கொண்டு வா என்று வரதக்ஷிணை வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இப்படிப் பண்ணினால் டம்பம் போவது ஒன்று; நல்ல ஆரோக்கியமும் மனஸின் அபிவிருத்தியும் ஏற்படுவது இன்னொன்று; மூன்றாவதாக சாஸ்திரோக்தமான வாழ்க்கையையும் வழக்கங்களையும் நிலை நிற்கும்படிப் பண்ணுவது.

விவாஹத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்ததில் இத்தனை கதையும் வந்து சேர்ந்து விட்டது. இன்னொரு கதை விட்டுப் போச்சு. அதையும் சொல்கிறேன். புருஷப் பிரஜைகளைவிட பெண் பிரஜைகள் அதிகமாக இருப்பதற்கு ஒரு காரணம் சொன்னேன். மெய்வருந்தி உழைக்காமல் உட்கார்ந்து வேலை செய்வது காரணம் என்றேன். இன்னொன்று தோன்றுகிறது. அதையும் சொல்கிறேன். எனக்குத் தோன்றுவது மட்டுமல்ல, சாஸ்திரத்திலேயே சொல்லியிருப்பதுதான். அதாவது ஒளபாஸனாதிகளைப் பண்ணிக் கொண்டு ஆசார சீலனாகப் புருஷன் இருந்தால் அவன் ஆரோக்கியமாகவும் நல்ல மனவிருத்தியோடும் இருப்பதோடு ஆண் சந்ததி உண்டாகும்.

பிராசீனமான ஆசாரம் உடையவர்களுக்கு துர்பலம் இல்லை; வியாதி இல்லை. பிராசீன ஆசாரத்தை இப்பொழுது கொஞ்சமாவது அநுஷ்டித்து வருகிறவர்கள் ஸ்திரீகள்தாம். அதனால் அவர்களிடம் உண்டாகிற பிரஜைகளிலும் அதிகமாகப் பெண்களே இருக்கிறார்கள். புருஷர்களும் அதிகமாகப் பிராசீன ஆசாரத்தை வைத்துக் கொண்டிருந்தால் இப்போதைவிட ஆண் ஸந்ததி அதிகமாக உண்டாகும். இரண்டும் ஸமவிகிதமாகும். ஸ்தல தரிசனம், தீர்த்த ஸ்நானம், பூஜை முதலியவைகளைப் புருஷர்கள் பண்ணி வந்தார்கள். இப்பொழுது அவர்களுக்கும் சேர்த்து ஸ்திரீகள் பண்ணுகிறார்கள்! புருஷர்கள் ஆசாரத்தை விட்டதனால் புருஷப் பிரஜைகள் குறைவாக ஆகிவிட்டார்கள். ஆகவே பாக்கி எதற்காக இல்லாவிட்டாலும் குடும்ப வாழ்க்கை எகனாமிகலாக நன்றாக இருக்க வேண்டுமென்பதற்காவது புருஷர்கள் ஆசார அநுஷ்டானங்களை வைத்துக் கொள்ள வேண்டும். தாரித்திரிய நிவர்த்திக்கும் வரசுல்க [வரதக்ஷிணை] நிவர்த்திக்கும் ஆசார அநுஷ்டானந்தான் வழி.

கூட்டங்கூடி, சீர்திருத்தம் என்று சொல்லிக் கொண்டு யோஜிக்காமல் கையெழுத்துப் போடுகிறார்கள். அந்த மாதிரிக் காரியங்களெல்லாம் தற்கால சாந்தியானவையே. பரிகாரம் நிரந்தரமாக இருப்பதற்கு இதுதான் மருந்து.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is உற்றமும் சுற்றமும் செய்யவேண்டியது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  விவாஹத்தின் உத்தேசங்கள்
Next