சின்னங்கள் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

நாம் இந்த மதத்தைச் சேர்ந்தவன் என்றால் அதற்கு சில வெளி அடையாளங்கள், சின்னங்கள் உண்டு.

‘ஸ்கௌட்’ (சாரணர்)களுக்குத் தனி உடுப்பு இல்லையா? ஆர்மி [தரைப்படை] , நேவி [கப்பற்படை] ஒவ்வொன்றில் இருப்பவருக்கும் வேறு வேறு வெளி அடையாளங்கள் இருக்கின்றன. போலீஸிலேயே பல பிரிவுகளுக்குப் பல தினுஸாக இருக்கின்றன. இவர்கள் டிரெஸ்ஸையும், பாட்ஜ் முதலானவற்றையும் மாற்றிக் கொள்வதால் இவர்கள் செய்கிற காரியம் ஒன்றும் மாறிவிடாது. இருந்தாலும் அப்படி மாற்றிக் கொள்ளக் கூடாது என்று கட்டாயமாக விதி இருக்கிறது. போலீஸ்காரன் தொப்பியை நேவிக்காரன் வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படியே இவன் தொப்பியை அவன் வைத்துக் கொள்ளக்கூடாது. எதிலும் கட்டுப்பாடு, ஒழுங்கு (discipline, orderliness) இருக்க வேண்டும்.

இந்த டிஸிப்ளின், ஆர்டர் மதத்துக்கும் வேண்டுமல்லவா? அதனால்தான் பல வேறு ஜாதிக்காரர்கள், வெவ்வேறு ஆசிரமக்காரர்கள் ஆகிய ஒவ்வொருத்தருக்கும் வித்தியாஸமான சின்னங்களை, காரியங்களைக் கொடுத்திருக்கிறது. ‘இப்படி வேஷ்டி கட்டிக் கொள்ளு, இப்படி புடவை கட்டிக் கொள்ளு, இந்த மாதிரி நெற்றிக்கு இட்டுக் கொள்ளு என்றெல்லாம் ரூல்களை தர்ம சாஸ்திரம் சொல்கிறது.

இது வெறும் சமூகக் கட்டுப்பாட்டுக்காக மட்டும் சொன்னதல்ல. இவை ஒவ்வொன்றிலும் ஜீவனைப் பரிசுத்தி பண்ணுகிற சூக்ஷ்மமான அம்சமும் உண்டு.

கச்சேரியில் ஸேவகனாயிருப்பவனுக்கு டவாலி உண்டு. அதிகாரிக்கு அது கிடையாது. ஏன் இப்படி என்று நாம் கேட்பதில்லை. ஆனால் சாஸ்திரத்தில் அவரவர் தொழிலுக்கும் குலாசாரத்துக்கும் ஏற்றதாக வேறு வேறு அடையாளங்களைச் சொன்னால் மட்டும் ஆக்ஷேபிக்கிறோம். ஸமத்வம் (equality) என்று சத்தம் போடுகிறோம். ஸமஸ்த ஜன‌ ஸமூகத்தின் க்ஷேமத்துக்காகவும் காரியத்தில் பலவாகப் பிரிந்திருந்த போதிலும், ஹ்ருதயத்தில் ஒன்றாக சேர்ந்திருந்த நம்முடைய சமுதாய அமைப்பில் ஆசார அநுஷ்டானங்களையும், அடையாளங்களையும் பிரித்துக் கொடுத்தது அவரவரது குண-கர்மாக்களுக்கு அநுகூலம் பண்ணுவதற்குத்தான் என்பதை மறந்து, இதிலே வாஸ்தவத்தில் இல்லாத உயர்வு தாழ்வுகளைக் கல்பித்துக் கொண்டு சண்டை போடுகிறோம்.

இப்போது கடைசியில் ஒருத்தருக்கும் ஒரு மதச் சின்னமும் இல்லை என்று ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.

பாக்கி அடையாளங்களை வெட்கப்படாமல் போட்டுக்கொள்கிறோம். ஆத்மாவுக்கு நல்லது செய்கிற மதச் சின்னங்களை போட்டுக் கொள்ள மட்டும் வெட்கப்படுகிறோம். “எல்லாம் ஸூபர்ஸ்டிஷன்” என்கிறோம். சீர்திருத்தம் என்று ஆரம்பிக்கிறோம். இப்படிச் சொல்லிக் கொண்டே, சீர்திருத்தக்காரர்கள் என்று அடையாளம் தெரிவதற்காக ஒரு குல்லா போட்டுக் கொள்கிறோம்; அல்லது ஏதோ ஒரு கலரில் ச‌ட்டை, துண்டு போட்டுக் கொள்கிறோம். இவற்றுக்கு தெய்வத்துக்கும் மேலான முக்யத்தைத் தருகிறோம்!

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is சுயச்சையும் கட்டுப்பாடும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  ஸ்மிருதிகள் சுதந்திர நூல்கள் அல்ல
Next