அங்குமிங்கும்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

எட்டாம் பத்து

அங்குமிங்கும்

ஆழ்வார், பகவானின் எழில்மிகு சுகுமாரமான வடிவழகை நினைத்து, 'எம்பெருமான், அநுகூலர்களாக இல்லாதவர்கள் வாழும் இந்நிலத்தில் தன் வடிவழகைக் காட்டிக் கொண்டு உலாவுகிறானே!இவனுக்கு என்ன தீங்கு நேருமோ?' என்று அஞ்சினார். பகவான், 'ஆழ்வீர், நீர் அஞ்ச வேண்டாம். என்மீது பரிவு காட்ட முக்தர், நித்யர், முழு க்ஷ§க்கள் அனைவரும் இருக்கின்றனர்' என்று கூறினான். அதனால் ஆழ்வார் அச்சம் தீர்ந்தமை ஈண்டுக் கூறப்பட்டுள்ளது.

உலகில் பக்தர்கள் இருத்தலால் அச்சம் தீர்தல்

கலி நிலைத்துறை

யாவரும் கண்ணனையே சரணடைவர்

3469. அங்கு மிங்கும் வானவர் தானவர் யாவரும்,

எங்கும் இனையையென் றுன்னை அறியகிலா தலற்றி,

அங்கம் சேரும் பூமகள் மண்மகள் ஆய்மகள்,

சங்கு சக்கரக் கையவ னென்பர் சரணமே.

ஆழிப்படை ஏந்திய ஈசற்கு ஆளாகுக

3470. சரண மாகிய நான்மறை நூல்களும் சாராதே,

மரணம் தோற்றம் வான்பிணி மூப்பென் றிவைமாய்த்தோம்,

கரணப் பல்படை பற்றற வோடும் கனலாழி,

அரணத் திண்படை யேந்திய ஈசற் காளாயே.

எம்பெருமானுக்கு இவ்வுலகில் காவல் யார்?

3471. ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார்தாம்,

வாளும் வில்லுங் கொண்டுபின் செல்வார் மாற்றில்லை,

தாளும் தோளும் கைகளை யாரத் தொழக்காணேன்,

நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே.

இருள்மிக்க உலகில் கார்வண்ணனை எப்படிக் காண்பேன்?

3472. ஞாலம் போனகம் பற்றியோர் முற்றா வுருவாகி,

ஆலம் பேரிலை யன்னவ சஞ்செய்யும் அம்மானே,

காலம் பேர்வதோர் காரிரு ளூழியத் துளதால்,உன்

கோலங் காரேழில் காணலுற் றாழும் கொடியேற்கே.

திரிவிக்ரமா களைப்பால் உறங்குகிறாயோ?

3473. கொடியார் மாடக் கோளூ ரகத்தும் புளிங்குடியும்,

மடியா தின்னே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான்,

அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல்,இப்

படிதான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே.

திருமால் என் மனத்தில் சுற்றி வருகிறார்.

3474. பணியா அமரர் பணிவும் பண்பும் தாமேயாம்,

அணியார் ஆழியும் சங்கமு மேந்தும் அவர்காண்மின்,

தணியா வெந்நோ யுலகில் தவிர்ப்பான், திருநீல

மணியார் மேனியோ டென்மனம் சூழ வருவாரே.

அடியேன் திறனைப் பகவானிடம் யாரும் சொல்லவில்லையே!

3475. வருவார் செல்வார் வண்பா சாரத் திருந்த,என்

திருவாழ் மார்வற் கென்திறம் சொல்லார் செய்வதென்,

உருவார் சக்கரம் சங்கு சுமந்திங் கும்மோடு,

ஒருபா டுழல்வா னோரடி யானு முளனென்றே?

திருமாலே c என்று எனக்கருள நினைப்பாய்?

3476. என்றே யென்னையுன் ஏரார் கோலத் திருந்தடிக்கீழ்,

நின்றே யாட்செய்ய நீகொண் டருள நினைப்பதுதான்,

குன்றேழ் பாரேழ் சூழ்கடல் ஞாலம் முழுவேழும்,

நின்றே தாவிய நீள்கழல் ஆழித் திருமாலே

திருமாலுக்கே நான் அடிமை என்பேன்

3477. திருமால் நான்முகன் செஞ்சடை யானென் றிவர்கள், எம்

பெருமான் தன்மையை யாரறி கிற்பார் பேசியென்,

ஒருமா முதல்வா!ஊழிப் பிரானென் னையாளுடை,

கருமா மேனியன் என்பனென் காதல் கலக்கவே.

கடல் கடைந்தானை நான் முற்றமுடியப் புகழ இயலாது

3478. கலக்க மில்லா நல்தவ முனிவர் கரைகண்டோர்,

துளக்க மில்லா வானவ ரெல்லாம் தொழுவார்கள்,

மலக்க மெய்த மாகடல் தன்னைக் கடைந்தானே,

உலக்க நாம்புகழ் கிற்பதென் செய்வ துரையீரே.

இவற்றைப் படித்தால் பிறவித் துன்பம் அகலும்

3479. உரையா வெந்நாய் தவிர அருள்நீண் முடியானை,

வரையார் மாடம் மன்னு குருகூர்ச் சடகோபன்,

உரையேய் சொல்தொடை ஓரா யிரத்து ளிப்பத்தும்,

நிரையே வல்லார் நீடுல கத்துப் பிறவாரே.

நேரிசை வெண்பா

மாறன் திருவடிகளைச் சேர்ந்தவர் வாழ்வர்

அங்கமரர் பேண அவர்நடுவே வாழ்திருமாற்கு,

இங்கோர் பரிவரிலை யென்றஞ்ச, - எங்கும்

பரிவருள ரென்னப் பயந்தீர்ந்த மாறன்,

வரிகழற்றாள் சேர்ந்தவர்வாழ் வார்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is நங்கள் வரிவளை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  வார்கடா அருவி
Next