வளவேழ்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

முதற்பத்து

வளவேழ்

ஆழ்வார் தம் நிலைமைகளைக் கூறிப் பகவானை விட்டு அகன்றுவிடப் பார்த்தார். அவரது பிரிவைப் பொறுக்க மாட்டாத பகவான் தன் சீல குணங்களைக் காட்டி ஆழ்வாரோடு கலக்கிறான். இதனைக் கூறுகிறது இப்பகுதி.


அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கண்ணனே என்தந்தை என்பேன்

2719. வளவே ழுலகின் முதலாய்

வானே ரிறையை, அருவினையேன்

'களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட

கள்வா!' என்பன் பின்னையும்,

'தளவேழ் முறுவல் பின்னைக்காய்

வல்லா னாயர் தலைவனாய்,

இளவே றேழும் தழுவிய

எந்தாய்!' என்பன் நினைந்துநைந்தே.

மாயோனே!எனக்கு அருளினால் உன் பெருமை உயரும்

2720. நினைந்து நைந்துள் கரைந்துருகி

இமையோர் பலரும் முனிவரும்,

புனைந்த கண்ணி நீர்சாந்தம்

புகையோ டேந்தி வணங்கினால்,

நினைந்த எல்லாப் பொருள்கட்கும்

வித்தாய் முதலில் சிதையாமே,

மனஞ்செய் ஞானத் துன்பெருமை

மாசூ ணாதோ மாயோனே!

எல்லாவுயிர்க்கும் தாயாக இருப்பவன் திருமாலே

2721. மாயோ னிகளாய் நடைகற்ற

வானோர் பலரும் முனிவரும்,

'நீயோ னிகளைப் படை' என்று

நிறைநான் முசனைப் படைத்தவன்,

சேயோ னெல்லா அறிவுக்கும்

திசைக ளெல்லாம் திருவடியால்

தாயோன், எல்லா வெவ்வுயிர்க்கும்

தாயோன் தானே ருருவனே.

வானோர் பெருமானே என் தலைவன்

2722. தானே ருருவே தனிவித்தாய்த்

தன்னில் மூவர் முதலாய,

வானோர் பலரும் முனிவரும்

மற்றும் மற்றும் முற்றுமாய்,

தானோர் பெருநீர் தன்னுள்ளே

தோற்றி யதனுள் கண்வளரும்

வானோர் பெருமான் மாமாயன்

வைகுந் தன்எம் பெருமானே.

மதுசூதா நின் திருவடியை நான் சேர அருள்

2723. மானேய் நோக்கி மடவாளை

மார்வில் கொண்டாய்!மாதவா,

கூனே சிதைய வுண்டைவில்

நிறத்தில் தெறித்தாய்!கோவிந்தா,

வானோர் சோதி மணிவண்ணா!

மதுசூ தா!நீ யருளாய்,உன்

தேனே மலரும் திருப்பாதம்

சேரு மாறு வினையேனே.

கேசவா!வினைதீர்க்கும் மருந்து நீயே

2724. வினையேன் வினைதீர் மருந்தானாய்!

விண்ணோர் தலைவா!கேசவா,

மனைசே ராயர் குலமுதலே!

மாமா யன்னே!மாதவா,

சினையேய் தழைய மராமரங்கள்

ஏழும் எய்தாய் சிரீதரா,

இனையா யினைய பெயரினாய்

என்று நைவன் அடியேனே

கண்ணனைக் காண நான் துடிக்கிறேன்

2725. அடியேன் சிறிய ஞானத்தன்

அறித லார்க்கு மரியானை,

கடிசேர் தண்ணந் துழாய்க்கண்ணி

புனைந்தான் றன்னைக் கண்ணனை,

செடியார் ஆக்கை யடியாரைச்

சேர்தல் தீர்க்கும் திருமாலை,

அடியேன் காண்பான் அலற்றுவன்

இதனில் மிக்கோர் அயர்வுண்டே?

மாயோனே!நின் மாயைதான் என்னே!

2726. உண்டா யுலகேழ் முன்னமே

உமிழ்ந்து மாயை யால்புக்கு,

உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர்

உவலை யாக்கை நிலையெய்தி,

மண்டான் சோர்ந்த துண்டேலும்

மனிசர்க் காகும் பீர், சிறிதும்

அண்டா வண்ணம் மண்கரைய

நெய்யூண் மருந்தோ மாயோனே!

கண்ணனே என் தலைவன்

2727. மாயோம் தீய அலவலைப்

பெருமா வஞ்சப் பேய்வீய,

தூய குழவி யாய்விடப்பால்

அமுதா அமுது செய்திட்ட

மாயன், வானோர் தனித்தலைவன்

மலராள் மைந்த னெவ்வுயிர்க்கும்

தாயோன், தம்மா னென்னம்மான்

அம்மா மூர்த்தி யைச்சார்ந்தே.

என்னைத் திருத்துபவன் நெடுமால்

2728. சார்ந்த இருவல் வினைகளும்

சரித்து மாயப் பற்றறுத்து,

தீர்ந்து தன்பால் மனம்வைக்கத்

திருத்தி வீடு திருத்துவான்,

ஆர்ந்த ஞானச் சுடராகி

அகலம் கீழ்மேல் அளவிறந்து,

நேர்ந்த வுருவாய் அருவாகும்

இவற்றி னுயிராம் நெடுமாலே!

மாமாயனே என்றால் துன்பம் வராது

2729. 'மாலே!மாயப் பெருமானே!

மாமா யனே!' என்றென்று,

மாலே யேறி மாலருளால்

மன்னு குருகூர்ச் சடகோபன்,

பாலேய் தமிழ ரிசைகாரர்

பத்தர் பரவும் ஆயிரத்தின்

பாலே, பட்ட இவைபத்தும்

வல்லார்க் கில்லை பரிவதே.

நேரிசை வெண்பா

மாறனைத் தம்மிடம் சேர்த்துக் கொண்டார் திருமால்

வளமிக்க மால்பெருமை மன்னுயிரின் றன்மை

உளமுற்றங் கூடுருவ வோர்ந்து, - தளர்வுற்று

நீங்நினை மாறனைமால் நீடிலகு சீலத்தால்

பாங்குடனே சேர்த்தான் பரிந்து.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is அஞ்சிறை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  பரிவதில்
Next