சீலம் இல்லா

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

நான்காம் பத்து

சீலம் இல்லா

உலகில் மயக்கமடைந்திருக்கும்போது நோயாளிக்கு நோயின் வலி தெரிவதில்லை. மயக்கம் நீங்கியபிறகு அவன் படாத பாடு படுவதுபோல் ஆயிற்று ஆழ்வாரின் நிலையும், அந்நிலையை ஈண்டு அவர் பாடுகிறார்.

தம்மிடம் வந்தருளுமாறு திருமாலை உருக்கத்துடன் அழைத்தல்

3073. 'சீலம் இல்லாச் சிறிய னேலும்

செய்வினை யோபெரிதால்,

ஞாலம் உண்டாய் ஞான

மூர்த்தி நாராய ணா!'என்றென்று,

காலந் தோறும் யானி

ருந்து கைதலை பூசலிட்டால்

கோல மேனி காண

வாராய் கூவியும் கொள்ளாயே.

வாமனா!நான் காணுமாறு வந்தருள்க

3074. 'கொள்ள மாளா இன்ப

வெள்ளம் கோதில தந்திடும்,என்

வள்ள லேயோ!வையங் கொண்ட

வாமனா வோ!'என்றென்று,

நள்ளி ராவும் நண்பகலும்

நானிருந் தோல மிட்டால்,

கள்ள மாயா!உன்னை

யென்கண் காணவந் தீயாயே.

எந்தாய்!என் எதிரில் வந்து நின்றாவது திட்டு

3075. 'ஈவி லாத தீவினைகள்

எத்தனை செய்த னன்கொல்?

தாவி வையம் கொண்ட

எந்தாய்!தாமோத ரா!'என்றென்று

கூவிக் கூவி நெஞ்சுருகிக்

கண்பனி சோர நின்றால்,

பாவி நீயென் றொன்று

சொல்லாய் பாவியேன் காணவந்தே.

நான் எவ்வளவு அரற்றியும் பயனில்லையே

3076. 'காண வந்தென் கண்மு

கப்பே தாமரைக் கண்பிறழ,

ஆணி செம்பொன் மேனி

எந்தாய்!நின்றருளாய்' என்றென்று,

நாண மில்லாச் சிறுத

கையேன் நானிங் கலற்றுவதென்,

பேணி வானோர் காண

மாட்டாப் பீடுடை யப்பனையே?

அப்பனே!இப்பொழுதே வந்தருள்

3077. அப்ப னே!அட லாழி யானே,

ஆழ்கட லைக்கடைந்த

துப்ப னே,உன் தோள்கள்

நான்கும் கண்டிடக்கூடுங் கொலென்று,

எப்பொ ழுதும் கண்ண

நீர்கொண் டாவி துவர்ந்துவர்ந்து,

இப்பொ ழுதே வந்தி

டாயென் றேழையேன் நோக்குவனே.

எந்தாய்!என் உடலிலும் உயிரிலும் உள்ளாய்

3078. நோக்கி நோக்கி உன்னைக்

காண்பான் யானென தாவியுள்ளே,

நாக்கு நீள்வன் ஞான

மில்லை நாடோறு மென்னுடைய,

ஆக்கை யுள்ளு மாவி

யுள்ளும் அல்லபு றத்தினுள்ளும்,

நீக்க மின்றி யெங்கும்

நின்றாய்!நின்னை யறிந்தறிந்தே.

ஞான மூர்த்தியே!நின்னைக் கண்டு பேதைமை தீர்ந்தேன்

3079. அறிந்த றிந்து தேறித்

தேறி யானென தாவியுள்ளே,

நிறைந்த ஞான மூர்த்தி

யாயை நின்மல மாகவைத்து,

பிறந்தும் செத்தும் நின்றிடறும்

பேதைமை தீர்ந்தொ ழிந்தேன்

நறுந்து ழாயின் கண்ணி

யம்மா!நானுன்னைக் கண்டுகொண்டே.

திருத்துழாயானே!யாங்கள் பாடியாடுதற்கு c வருக

3080. கண்டு கொண்டென் கைக ளார

நின்திருப் பாதங்கள்மேல்,

எண்டி சையு முள்ள

பூக்கொண் டேத்தி யுகந்துகந்து,

தொண்ட ரோங்கள் பாடி

யாடச் சூழ்கடல் ஞாலத்துள்ளே,

வண்டு ழாயின் கண்ணி

வேந்தே!வந்திட கில்லாயே.

சக்ரதாரீ நின்னைக் காணத் தடவுகின்றேன்

3081. இடகி லேனொன் றட்ட

கில்லேன் ஐம்புலன் வெல்லகில்லேன்,

கடவ னாகிக் காலந்

தோறும் பூப்பறித் தேத்தகில்லேன்,

மடவன் நெஞ்சம் காதல்

கூர வல்வினை யேன்அயர்ப்பாய்,

தடவு கின்றே னெங்குக்

காண்பன் சக்கரத் தண்ணலையே?

கண்ணா!நின்னை ஞானக் கண்களால் கண்டு தழுவுவேன்

3082. சக்க ரத்தண் ணலேயென்று

தாழ்ந்து கண்ணீர் ததும்ப,

பக்கம் நோக்கி நின்ற

லந்தேன் பாவியேன் காண்கின்றிலேன்,

மிக்க ஞான மூர்த்தி

யாய வேத விளக்கினை,என்

தக்க ஞானக் கண்க

ளாலே கண்டு தழுவுவனே.

இவற்றைப் பாடுவோர் வைகுந்தம் அடைவர்

3083. தழுவி நின்ற காதல்

தன்னால் தாமரைக் கண்ணன்றன்னை,

குழுவு மாடத் தென்குரு

கூர்மா றன்சட கோபன்,சொல்

வழுவி லாத வொண்த

மிழ்கள் ஆயிரத்து ளிப்பத்தும்,

தழுவப் பாடி யாட

வல்லார் வைகுந்த மேறுவரே.

நேரிசை வெண்பா

கண்ணனை இராப்பகல் வருந்தி அழைத்தான் மாறன்

சீலமிகு கண்ணன் திருநாமத் தாலுணர்ந்து,

மேலவன்றன் மேனிகண்டு மேவுதற்குச், - சால

வருந்தியிர வும்பகலும் மாறாமற் கூப்பிட்,

டிருந்தனனே தென்குருகூர் ஏற.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is தீர்ப்பாரை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  ஏறாளாம்
Next