ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருப்புட்குழி
காஞ்சீபுரத்திலிருந்து 7 மைல் மேற்கே சென்னை - வேலூர் சாலையில்,
பாலுசெட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து இடது புறம் 2 ஃபர்லாங் தூரத்தில் இருக்கிறது. சென்னையிலிருந்து 50 மைல். காஞ்சீபுரத்திலிருந்து பஸ் வசதி உண்டு. சாலையில் இறங்கி, 2 ஃபர்லாங் தூரம் தெற்கே நடந்து சென்று, கோவிலை அடைய வேண்டும். இவ்வூரில் வசதிகள் ஒன்றும் இல்லை.
மூலவர் - விஜயராகவப் பெருமாள், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - மரகதவல்லித் தாயார். (தனிக் கோவில் நாச்சியார்) .
தீர்த்தம் - ஜடாயு தீர்த்தம்.
விமானம் - விஜயகோடி விமானம் (வீரகோடி விமானம்) .
ப்ரத்யக்ஷம் - ஜடாயு.
விசேஷங்கள் பிள்ளைப்பேறு வேண்டும் பெண்கள், கொஞ்சம் பயிற்றை மடைப்பள்ளியில் கொடுத்து, வறுத்து, நனைத்து மடியில் கட்டிக்கொண்டு தூங்குவார்கள். வறுத்த பயிர் முளைத்தால் பிள்ளைபேறு உண்டு என்று அர்த்தமாம். ராமானுஜாசார்யாரின் குருவான யாதவப்ரகாசர் இங்குதான் சிஷ்யர்களுக்கு வேதாந்த பூர்வபக்ஷங்களைக் கற்பித்தார். இந்த ஸ்தலத்தில் ஸீதையைத் தேடப்போனபோது ராமன் சிறிது காலம் தங்கி இருந்ததாகவும் அப்போது ஜடாயுவுக்கு தர்ப்பணம் செய்து மோக்ஷமளிக்க, ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கியதாகவும், எனவே, இத்தலத்திற்கு திரு புள்குழி என்று பெயர் ஏற்பட்டதாகவும் வரலாறு. கோயிலுக்கு எதிரில் ஜடாயு ஸந்நிதி இருக்கிறது. மூலவர் துடையின் மேல் ஜடாயுவை வைத்துக்கொண்டு ஸம்ஸ்காரம் செய்யும் நிலையில் எழுந்தருளி இருக்கிறார். அந்த தாபத்தை தாங்க முடியாத ஸ்ரீ தேவியும் பூதேவியும் இடம்வலமாக மாறி எழுந்தருளியுள்ளனர். தாயார் மஹிமையால் வறுத்த பயிறு முளைப்பதால் "மரகதவல்லி" என்று திருநாமம் ஏற்பட்டதாகப் புராண வரலாறு. நம்பிள்ளையின் சிஷ்யரான பின் பழகிய பெருமாள் ஜீயர் அவதரித்த ஸ்துலம் இதுவே. இந்த ஊர் குதிரை வாகனம் உண்மையான குதிரைப் போலவே அசையும் உறுப்புகள் கொண்டது. ஸ்ரீ ராமாநுஜரும், ஸ்ரீமணவாளமாமுனிகளும் பல முறை மங்களாசாஸனம் செய்த இடம்.
மங்களாசாஸனம் -
திருமங்கையாழ்வார் - 1135, 2674 (117)
மொத்தம் 2 பாசுரங்கள்.