மானஸீக பூஜையின் சிறப்பு

வைகாநஸ பாஞ்சராத்திர சைவ தாந்திரிக ஆகமிகர்கள் எல்லாரும் மானஸிக அர்ச்சனையை ஒப்புக்கொண்டார்கள். பூஜாக்கிரமத்தில் இதற்கு இடம் முக்கியமாக உள்ளதா இல்லையா என்பதில் விவாதம் எதுவும் ஏற்படவில்லை. மானஸிக அர்ச்சனம் பூஜை முறையில் மிகவும் முக்கியமான ஸ்தானம் பெற்றுள்ளது.

பூஜையை ஆரம்பிக்கும்பொழுது கவாடோத்காடனம் (கதவைத் திறப்பது) முதற்கொண்டு த்ரவ்யார்ச்சனம் (திரவியங்களை அர்ச்சிப்பது) என்ற நிகழ்ச்சி வரையில் நிறைவேறிய பிறகு ‘ந்யாஸம்’ என்பது முக்கியமான பாகமாகச் சொல்லியிருக்கிறது. இந்த ந்யாஸம் என்பது ஆராதனம் செய்யும் அர்ச்சகர்களுடைய சரீரத்துடன் சம்பந்தப் பட்டது. ஆராதிக்கப்படும் பிம்பத்துக்கும் செய்யவேண்டிய முக்கியமான அம்சம். வைகானஸ பகவத் சாஸ்திரத்தில் மிக அழகாகவும், மிகமுக்கியமானதாகவும், மிக விரிவாகவும் நியாஸம் கூறியிருக்கிறது. எந்தக் காரியத்தையும் சரியான முறையில் செய்தால்தான நல்ல முறையிலும், அதிகமான ரீதியிலும், நாம் விரும்பிய முறையிலும் பலனை எதிர்பார்க்க முடியும். இது நடைமுறை விவகாரங்களில் நன்றாக அறிந்த விஷயம்.

பூஜிப்பவரின் சரீரம் பரிசுத்தமான முறையில் இருந்தால்தான் அவர் செய்யும் பூஜையும் மிகவும் பரிசுத்தமான முறையில் அமையும். அதன் பயனும் விரும்பும் முறையில் கிடைக்கும். அந்தச் சரீரத்துக்கு ந்யாஸம் அவசியம்.

“மந்தாரம் த்ராயத இதி மந்த்ர:” என்று மந்த்ர சப்தத்துக்கு விளக்கம் கூறுவர். மந்த்ரங்களை ஜபிப்பவர் தம்முடைய சரீரத்தைப் பரிசுத்தமானதாகச் செய்துகொண்டு ஜபிப்பாரானால் அந்த மந்த்ரம் அவருக்குத் தூயபலனைக் கொடுக்கும். எந்த மந்த்ரமாக இருந்தாலும் அங்க ந்யாஸம் கரந்யாஸம் இல்லாமல் இராது. அந்த மந்த்ரத்துக்குள்ள அங்கந்யாஸ கரந்யாஸங்களைச் செய்துகொண்டு ஜபித்தால்தான் அந்த மந்த்ரத்துக்குப் பலன் உண்டு. வெறும் மந்திரத்தை  ஆயிரமல்ல, கோடியல்ல, எவ்வளவு முறை ஜபித்தாலும் பூர்ண பலன் இல்லை என்பது சித்தாந்தம். மந்த்ரங்களுக்கு அங்கந்யாஸ கரந்யாஸங்கள் அவசியமாக இருப்பது போலவே பூஜாக்ரமத்திலும் ந்யாஸம் என்பது முக்கியமான அம்சமாகும். “ந்யாஸ்யத இதி ந்யாஸ:” என்ற விளக்கப்படி, ந்யாஸம் என்பதற்கு, சக்தி நன்கு வைக்கப்படிகிறது என்பது பொருள்.

பூஜாக்கிரமத்தில் முதல்முதலில் பூஜை செய்யும் அர்ச்சகரின் சரீரத்துக்கு ந்யாஸம் சொல்லியிருக்கிறது. பூஜகர் முதலில் தம்முடைய சரீரத்தைப் பரிசுத்தமாகச் செய்துகொள்ள வேண்டும். பிறகு பிம்பத்தின் பூஜையைத் தொடங்க வேண்டும். ஸ்ரீ வைகாநஸ பகவத் சாஸ்திரத்தில் முதலில் சரீரத்துக்குத் தான் ந்யாஸம். பிறகு பிம்பத்துக்கு ந்யாஸம். “பாபபுருஷகல்பனம்-சோஷண –தாஹன –ப்லாவன –பிண்டீகரண –ஸுஷிரீகரண –ஸாவயவீகரண –புண்யபுருஷகல்பனம்” என்று சொன்னபடி பூஜகர் தம்முடைய சரீரத்தைப் பாபசரீரமாகப் பாவித்துக்கொண்டு, பிறகு அதைச் சோஷிக்கச்செய்து, தஹிக்கச்செய்து, ப்லாவன, பிண்டீகரண, ஸுஷிரீகரணங்களுக்குப் பிறகு கரசரணாத்யவய வங்களோடு கூடிய புண்யபுருஷ ஸ்வரூபமாகப் பாவித்துக்கொண்டு பிறகு ந்யாஸங்கள் செய்துகொள்ள வேண்டும். அதற்குப் பிறகுதான் அந்தப் பூஜகர் பகவதாராதனத்துக்குத் தகுந்தவராகிறார்.

பகவத் பிம்பத்துக்கு, “பாபபுருஷகல்பனம் முதல் புண்யபுருஷ கல்பனம்” வரையில் கூறப்பட்ட நிலைகள் இல்லை. ஆனாலும் பூஜகரின் சரீரத்துக்குச் செய்துகொள்ளும் ந்யாஸங்கள் பிம்பத்துக்கும் உண்டு. பிம்பந்யாஸம் செய்த பிறகு ஆவாஹனம் அர்ச்சனம் முதலிய பூஜாக்கிரமங்கள் உள்ளன. ஆகவே மானஸிக அர்ச்சனத்தின் அம்சமாகிய ந்யாஸமும் பூஜாக்ரமத்தில் முக்கியமாகும். ந்யாஸத்துக்குப் பிறகு மானஸிக அர்ச்சனம். “ஆத்மாநம் நாராயணம் புத்வா” என்று கூறியபடி தம்மை ஸாக்ஷாத் நாராயணனாகவே பாவித்துக்கொண்ட பிறகுதான் பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

பூஜகர் தம்முடைய சரீரத்தைப் பகவத் ஸ்வரூபமாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றால் அந்தச் சரீரம் புண்ய சரீரமாக ஆகிவிட வேண்டும். சாதாரண பாப சரீரமாக இருந்தால் அந்தப் பகவத் ஸ்வரூப பாவனாரூப எண்ணம் உதிக்காது என்பது மஹரிஷிகளுடைய அபிப்பிராயம். ஆகவே, பூஜா விதியில் சொன்னபடி பூஜகர் தம்முடைய சரீரத்தைப் புண்ணிய சரீரமாகச் செய்துகொண்டு, பிறகு தம்மை ஸாக்ஷாத் நாராயணனாகப் பாவித்துகொண்டு பிறகுதான் மானஸிக அர்ச்சனம் செய்யவேண்டும்.

கூட்டங்கள் நடக்கும்போது நிகழ்ச்சிநிரலில் உள்ள உபந்நியாசகர்கள் என்ன என்ன சொல்லப்போகிறார்ள் என்பதைத் தலைவர் முன்கூட்டியே சுருக்கமாகச் சொல்லுவார். அதைப் போலவே பூஜாக்கிரமத்திலும் மேலே நடக்கக்கூடிய பூஜை என்ன என்ன உபசாரங்களோடும், எவ்வளவு விமரிசையாகவும், எவ்வளவு அழகாகவும் நடைபெறும் என்பதை முன்கூட்டியே பூஜகர் தம்முடைய மனத்தில் பகவானைத் தியானித்து ஆராதித்துக் கொண்டபிறகு பூஜை செய்ய வேண்டும். இந்த மானஸிக அர்ச்சனத்தில், தம்முடைய மனத்தில் பகவத் ஸ்வரூபத்தை நன்றாகத் தியானித்துக்கொண்டு எல்லா உபசாரங்களையும் செய்துகொள்ள வேண்டும். பாஹ்ய ஆராதனத்தில் என்ன என்ன உபசாரங்கள் செய்யப்போகிறோமோ அவ்வளவு உபசாரங்களையும் மானஸிக அர்ச்சனத்தில் செய்துகொள்ள வேண்டும். இது எல்லா ஆகமங்களிக்கும் பொது.

प्राणायामैर्विकसितह्रुदयकमलान्तराकाशे वैश्वानरशिखामध्ये  परंज्योतिर्ज्वालारूपवत्स्वयमेव पुरुष: कृष्णपिङ्गल ऊर्ध्वरेता विरुपाक्शो विश्वरूप: परमानन्दविग्रह:भवेत् तं परमया भक्त्या पश्येत्॥

இப்படி, பகவத் ஸ்வரூபத்தைப் பக்தியோடு பார்க்க வேண்டும்.

धर्मकन्दसमुद्भूतं ज्ञाननालसुशोभितम्। ऐश्वर्याष्टदलोपेतं परं वैराग्यकर्णिकम्॥

अधोमुखं तु ह्रुद्पद्मं प्रणवेनोर्ध्वमुन्नयेत्। गयत्र्या विकचं कृत्वा तत्रेन्द्रादिदिगीश्वरान् ।

दलेष्वष्टसु सम्स्मृत्य द्वात्त्रिंशत्केसरेषु च ।शेषान् देवान् समभ्यर्च्य कर्णिकां प्रकृतिं स्मरेत् ॥

இப்படி ஹ்ருதய கமலத்தில் இந்திராதி திக்பாலகர்களையும் மற்றத் தேவர்களையும் தியானித்துக்கொள்ள வேண்டும்.

रश्मिमालावृतं ध्यात्वा तन्मये रविमण्डलम् । तन्मध्ये शशिर्बिम्बं च स्रवत्पीयूषशीतलम् ॥

तस्य मध्यगतं ध्यायेत् त्रिकोणं वह्निमण्डलम् ॥

என்று அதன் மத்தியில் சூரிய மண்டலத்தையும், அதன் மத்தியில் சந்திர பிம்பத்தையும், அதன் மத்தியில் அக்கினி மண்டலத்தையும் தியானிக்க வேண்டும்.

प्रभामध्यगतं पीठं चतुरस्रं हिरण्मयम् । नानामणिगणज्वालादुष्प्रेक्शं शुभमुज्वलम् ॥

तन्म्ध्ये च प्रभां ध्यायेत् निर्धूमां निष्कलां शुभाम् । नीवारशूकतन्वीं पीतां भास्वत्यनूपमाम् ॥

तस्या: शिखाया मध्ये परमात्मा व्यवस्थित: ।

 அதன் மத்தியில் நாநாவிதமான ரத்ன கசித ஸ்வர்ண பீடத்தில் பிரபாமத்யகதராகப் பரமாத்மா விளங்குவதாகத் தியானிக்க வேண்டும்.

सुवर्णवर्णं  रक्तास्यं  रक्तनेत्रं सुखोद्वहम् ।शुकपिञ्छाम्बरधरं विष्णुं प्रणवरूपिणम् ॥

किरिटहारकेयूरप्रलम्बब्रह्मसूत्रिणम् । श्रीवत्साङ्कं चतुर्बाहुं शंखचक्रधरं परम् ॥

वरदं कटिकं वापि वामं कट्यवलंबितम् । दधत्कौमोदकीं पद्मं ध्यात्वा देवं जनार्दनम् ॥

இப்படி ஸ்வர்ண வர்ணராகவும் பீதாம்பரதாரியாகவும், கிரீடாதி ஆபரண பூஷிதராகவும், ஸ்ரீ வத்ஸ பூஷிதராகவும், சங்கசக்ரதாரியாகவும், வரதகடிக ஹஸ்தராகவும், கெளமோதகி முதலியவற்றைத் தரித்தவராகவும் பகவானைத் தியானிக்க வேண்டும்.

आसन-स्वागतानुमान-पाद्याचमन-पुष्प-गन्ध-दूप-दीपार्घ्याचमन-स्नान-प्लोत-वस्त्रोत्तरीयाभरण-यज्ञोपवीत-पाद्याचमन-पुष्प-गन्ध-धूप-दीपाचमन-हवि:पानीयाचमन-मुखवासा:।

என்ற விசேஷ உபசாரங்களை மானஸிகமாக ஸமர்ப்பிக்க வேண்டும்.

एषा तु मानसी पूजा सर्वपापप्रणाशिनी ।

என்று இந்த மானஸிக அர்ச்சனையை முடித்துக்கொள்ள வேண்டும்.

भगवन् पुण्डारीकाक्श हृत्यागं तु मया कृतम्।

आत्मसात्कुरु देवेश बाह्ये त्वां सम्यगर्चये ॥

“பகவானே, ஹ்ருதயகத மானஸிக அர்ச்சனத்தைச் செய்தேன். இனி, பாஹ்ய அர்ச்சனையை நன்கு செய்கிறேன்” என்று பிரார்த்தித்துகொண்டு மேலே பூஜையைத் துவக்க வேண்டும்.

இது எல்லாப் பாவங்களையும் போக்க வல்லது सर्वपापप्रणाशिनी ஆகையால் இது மிகவும் முக்கியானது.

यथा देहे तथा बेरे न्यासकर्म समाचरेत् ।

என்றவாறு ந்யாஸாதிகளாலே பூஜகர் தம்முடைய சரீரத்தைப் பரிசுத்தமாகச் செய்துகொண்டு மேலே பூஜை செய்வதனால் அந்தப் பூஜையின் பலனும் பரிசுத்தமாகவும் விரும்பிய முறையிலும் கிடைக்கும் என்பதில் ஜயமில்லை.  

 


Home Page